பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

மனத்தின் தோற்றம்



எனவும், "என்றும் உள தென்தமிழ் இயம்பி இசை கொண்டான் எனவும் கம்பரால் போற்றிப் பாராட்டப் பெற்றுள்ள அகத்தியர் இயற்றிய அகத்தியம் என்னும் நூல், முதல் இலக்கண நூலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முழுநூலும் கிடைக்கவில்லை. இந்நூலின் சில பாக்கள் மட்டும் உரையாசிரியர்களின் உரைகளில் எடுத்தாளப் பட்டுள்ளன. அகத்தியமே முதல் நூலாக இருக்கும் என்று திட்டவட்டமாகச் சொல்வதற்கும் போதிய சான்று இல்லை.

அடுத்து நமக்கு முழுமையாகக் கிடைக்கும் முதல் இலக்கண நூல் தொல்காப்பியமாகும். எழுத்திலக்கணம், சொல் இலக்கணம், பொருள் இலக்கணம், யாப்பிலக் கணம், அணியிலக்கணம் என ஐந்து இலக்கணங்களும் அமைத்து இந்நூலைத் தொல்காப்பியர் இயற்றியுள்ளார். இதற்கு இணையான தமிழ் இலக்கண நூல் இன்றளவும் வேறு கிடையாது. தொல்காப்பியத்தைப் பின்பற்றிப் பின்னர் நூல்கள் பல எழுந்தன.

தொல்காப்பியர் காலத்தவராகக் கருதப்படும் அவிநயனார், காக்கை பாடினியார், செயிற்றியனார், பனம் பாரனார், நத்தத்தனார் முதலியோரும் இலக்கண நூல்கள் எழுதியிருப்பதாகத் தெரிகிறது. அவிநயனம், காக்கை பாடினியம், செயிற்றியம் முதலிய நூல்கள் இவர்களுள் சிலரின் படைப்புகளாகும், இந்தக் குறிப்பும், உரையாசிரியர் களின் உரைகளால் அறியப்படுகிறது.

தொல்காப்பியத்திற்குப் பின் பல நூல்கள் தோன்றினும், அதற்கு அடுத்தபடியாக இப்போது பயன்படுத்தப் படுவது, பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் என்னும் நல்ல நூலேயாம்.