பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

113



தமிழ்’ என்னும் புதிய பெயரைத் தங்கள் உள்ளகத்தி லிருந்தும் விலக்கிவிட்டுப் பொருத்தமான புதுமைகளைப் புகுத்திக் கொண்டிருக்கலாம் என்பது, இதுவரை கூறிய வற்றால் அறிய வேண்டியதாகும்.

இதுகாறும் இவ்வளவு கூறவேண்டியதின் காரண மாவது:- ‘புதிய தமிழ்’ என்னும் பெயர் பலரைப் புண் படுத்துவதேயாகும். இப்போது இது பற்றித் தமிழ் அறிஞர்களிடையே கடுமையான கார சாரமான கருத்து வேற்றுமை நிலவி வருகிறது. மொழியியல் என்னும் பாடம் படித்துப்பட்டம் பெற்றவர்கள், அப்பட்டம் பெறாதவர்களை மிகவும் மட்டமாக மதிக்கிறார்கள். இதற்கு எவ்வளவோ சான்றுகள் உண்டு.

அதே நேரத்தில் மொழியியல் என ஒன்றைத் தனியே படிக்காதவர்கள், மொழியியல் என்பது தமிழுக்கு வேண்டாத - வீணான ஒரு பெருஞ்சுமை என்கின்றனர். மொழியியல் என ஒன்றைத் தனியே படிக்காமலேயே, மொழியியல் எனத் தனியே படித்தவர்கள் செய்யும் பணியை முன்னோர் போல் செய்யலாம் என்பது இவர்களின் வாதம். முன்னோர்கள் செய்தது இப்படித்தானே.

‘தமிழ் வளர்ச்சிக்கு மொழியியலாரின் பங்கு’ என்னும் தலைப்பில் இந்தச் செய்திகளை யெல்லாம் ஆராய வேண்டியது மிகவும் இன்றியமையாதது. இங்கே இதை ஒதுக்கிவிடலாகாது.

கல்வித்துறையில், ஆங்கிலம், தமிழ், கணிதம், அறிவியல், வரலாறு, தரையியல், வானியல், உயிரியல், பொறியியல், மருத்துவம், வணிக இயல், பொருளியல், மெய்யுணர்வு என்னும் தத்துவ இயல், உளவியல், சமூக இயல், வேளாண்மை இயல் முதலிய தனித்தனித் துறைப் பாடங்கள் இருப்பது போலவே, மொழியியலுக்கும் தனிப்படிப்பும்