பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

மனத்தின் தோற்றம்



அடிகளார் இந்தப் பாடலில் ‘ஒரு கல்லால் இரண்டு மாங்காய்’ அடித்துள்ளார்.

மண்ணுலகைத் தாங்கும் சேடன்முடிவரையும் அகழி சென்றுள்ளது என்று கூறியதன் வாயிலாக அகழியின் ஆழத்தையும், ஞாயிறு மண்டலம் வரையும் மதில் உயர்ந் துள்ளது என்று கூறியதன் வாயிலாக மதிலின் உயரத்தையும் கற்பனை செய்தது ஒரு மாங்காயாகும்.

இந்தக் கற்பனையின் அடிப்படையில், தாழ்ந்தோர் உயர்வர் - உயர்த்தோர் தாழ்வர் என்னும் உலகியல் நடை முறை உண்மையைக் கூறியது இரண்டாவது மாங்காயாகும்.

இப்பாடலில் ஒரு கற்பனைச் செய்தியைக் கூறி அதன் அடிப்படையில் வேறோர் அறக் கருத்தைப் பெறவைத் திருப்பதால், இத்தகைய அமைப்பு வேற்றுப் பொருள் வைப்பு அணி எனப்படும்.

2.2. நாகமும் மயிலும்

ஒரு தனி நூலாக எழுத வேண்டிய அளவிற்குச் சிவப்பிரகாசரின் கற்பனை நயம் பரந்துபட்டுள்ளது. விரிவு அஞ்சி, இன்னும் ஒரே ஒரு கற்பனை நயத்தோடு இந்தத் தலைப்பை முடித்துக் கொள்ளலாம்.

இடப் பாகத்தில் பெண்ணையுடைய சிவன், பாம்பு, மண்டையோடு முதலியவற்றை அணிந்திருப்பவர். அவருடைய பிள்ளையாகிய முருகன் மயிலை ஊர்தியாக உடையவர்.

முருகன் தந்தையாகிய சிவனைக் காண மயில் ஊர்தியில் அமர்ந்து அடிக்கடி வருவது உண்டு. நாகப் பாம்புக்கு மயில் பகை என்பது அறிந்த செய்தி. முருகனது மயிலைச் சிவன் அணிந்துள்ள நாகப்பாம்பு பார்த்ததும், அஞ்சி, சிவன்