பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

மனத்தின் தோற்றம்



“இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே
ஒழுக்க முடையார் வாய்ச் சொல்” (415)

என்னும் குறள் ஈண்டு எண்ணத்தக்கது.

8.2 குழந்தை வளர்ப்பு

மோகினி மாயை என்னும் குழந்தையை அருமையாகப் போற்றி வளர்த்தமைக்கு மூன்று உவமைகள் கூறப் பட்டுள்ளன. அவை:-

“மிடியன் ஒருசெய்யாளன் அச்செய்
விளையக் காக்கும் செயல்போலப்
படியில் கல்வி விரும்பினோன்
பாடம் போற்றுமது போல
ஒடிவில் செங்கோல் மனுவேந்தன்
உலகம் புரக்கு முறைபோலக்
கொடிய நோன்பு செய்தீன்ற
கொடியை வளர்த்தாள் மோகினியே” (3.49)

என்பது பாடல். இதில் அரிய பெரிய ஆழ்ந்த கருத்துடைய மூன்று உவமைகளைக் காணலாம்.

9. தத்துவ ஆய்வு

அல்லமரும் கோரக்கர் என்பவரும் தத்துவ ஆய்வு செய்து உரையாடுகின்றனர். உயிர் என்பது பற்றியும் ஆன்மா என்பது பற்றியும் அல்லமர் கோரக்கருக்கு விளக்குகிறார்.

உயிர் என்பது ஆன்மாவின் பெயர் அன்று. மூக்கின் வழியாகப் போய் வந்து கொண்டிருக்கும் மூச்சுக் காற்றுக்குத்தான் உயிர் என்பது பெயராகும். உயிரை உடைய ஆன்மா என ஒன்றுள்ளது. உயிர் என்னும் பெயர் ஆகுபெயராய் அதனை உடைய ஆன்மாவைக் குறிக்கிறது. பாடல்;