பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

மனத்தின் தோற்றம்



என்னும் பாடல் பகுதிகளாலும் தெளியலாம். கழுவா உடலம் எனினும் மண்ணா மேனி எனினும் பொருள் ஒன்றே. ஒட்டக் கூத்தரின் தக்க யாகப் பரணியிலும்,

“மண்ணா உடம்பு - வருவோன் தன்னை நோக்கி”(219)

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கையுதிர்த்தல் தமக்கு பிடிக்காதவர்கள் பிடிக்காத மொழிகளைப் பேசின், அப்பால் போங்கள் என்று வாயால் சொல்லாமல், கையை அசைத்து அப்பால் போகும்படிக் குறிப்பு காட்டுதல் சமணத் துறவியர்களின் பழக்கமாம். குடிகாரன் ஒருவன் சமணத் துறவி ஒருவரை நோக்கிக் கூறாதன கூறிக் கிண்டல் செய்ய, அவனை அப்புறப்படுத்த அவர் கையசைத்தனாராம். இதனை,

“உண்டு தெளிந்து இவ்யோகத் துறுபயன்
கண்டால் எம்மையும் கையுதிர்க் கொண்மென
உண்ணா நோன்பி தன்னொடும் சூளுற்று
உண்மென இரக்குமோர் களிமகன்” (2:100-103)
“மையறு படிவத்து மாதவர் புறத்தெமைக்
கையுதிர்க் கோடலின்...” (5:54,55)

என்னும் பகுதிகள் அறிவிக்கின்றன.

ஐம்படைத்தாலி

இந்தக் காலத்தில் குழந்தைகளைக் காக்க அரையில் என்னென்னவோ கட்டுகின்றனர். அந்தக் காலத்தில் அரை யில் ஐம்படைத் தாலி கட்டினர். காத்தல் கடவுளாகிய திருமாலின் வளை, ஆழி, கதை, வாள், வில் என்னும் ஐந்து படைக் கருவிகளைச் சிறிய வடிவில் பொன்னால் செய்து அரையில் கட்டுவர். இதற்குத்தான் ஐம்படைத் தாலி கட்டுதல் என்பது பெயர்.