பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

179



என்பது பாடல் பகுதி. இதனால், தவ ஒழுக்கம் பூண்டோர்க்கும் உள்ளம் தடுமாறுதல் இயல்பு என்பது புலப் படும். பொறுத்தருள வேண்டும் என்ற வேண்டுகோளுடன், குமரகுருபர அடிகளாரின் நீதி நெறி விளக்கம் என்னும் நூலில் உள்ள ஒரு பாடலை இவண் தருகிறேன்.

“ஏந்தெழில் மிக்கான் இளையான் இசைவல்லான்
காந்தையர் கண்கவர் நோக்கத்தான்-வாய்ந்த
நயனுடை இன்சொல்லான் கேள்எனினும் மாதர்க்கு
அயலார்மேல் ஆகும் மனம்” ( )

என்பது பாடல். கணவன் எல்லா வகையிலும் சிறந்தவன் எனினும், ஒரு பெண்ணுக்கு மற்றோர் ஆடவன்பால் மனம் நாடக் கூடுமாம். அதாவது, மனம் மாற்றானைப் பற்றி நினைத்துப் பார்க்கக் கூடுமாம். இப்பாடல் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது.

உயிர்க் கடன்

கொற்றவைக்கு (துர்க்கைக்கு) உயிர்க்கடன் கொடுக்கும் வழக்கம் பண்டு இருந்தது. உயிர்க்கடன் தருவோர் தலைமுடியை மரத்தில் கட்டி விட்டுக் கழுத்தை அரிந்து கொள்வாராம். தலைமுடியை மரத்தில் கட்டி இவ்வாறு கழுத்தை அரிந்து கொண்டபின் தலைகள் மரத்தில் தொங்கிக்கொண்டிருக்குமாம். காடு அமர் செல்வியாகிய கொற்றவையின் கோட்டத்தில் இக்காட்சியைக் காணலாம்.

“உலையா உள்ளமோடு உயிர்க்கடன் இறுத்தோர்
தலைதுாங்கு நெடுமரம் தாழ்ந்து புறஞ்சுற்றிப்
பீடிகை ஓங்கிய பெரும்பலி முன்றில்
காடமர் செல்வி கழிபெருங் கோட்டம்” (6:50-53)

என்பது பாடல் பகுதி. சிலப்பதிகாரத்திலும் உயிர்க் கொடை கூறப்பட்டுள்ளது. ஒட்டக் கூத்தரின் தக்கயாக பரணியில்,