பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

208

மனத்தின் தோற்றம்



சிரட்டை

மலையாளத்தில், கொட்டாங்கச்சியை - அதாவது - தேங்காய் ஒட்டைக் குறிக்கச் ‘சிரட்ட’ என்னும் சொல் வழங்கப்படுகிறது. இந்தச் சொல் தமிழிலும் திருநெல்வேலி மாவட்டத்தில் வழங்கப்படுகிறது. இது தொடர்பான என் பட்டறிவு ஒன்றை இங்கே தெரிவிக்க விரும்புகிறேன். நான் காவிரிக் கரையில் உள்ள திருவையாற்று அரசர் கல்லூரியில் ‘வித்துவான்’ பட்டத்திற்குப் படித்துக்கொண்டிருந்த போது 1938 ஆம் ஆண்டில் எனது பதினாறாம் அகவையில் - நிகழ்ந்த ஒரு செய்தி வருமாறு:- கோடை - காவிரியில் சிறிதும் நீரோட்டம் இல்லை. வெண்மணல் பரந்து கிடந்தது. ஒருநாள், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சாமி என்ப வரும் முத்தணைந்த பெருமாள் என்பவரும் யானும் ஆற்று மணலில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தோம். பதினாறு அகவையே உடைய எனது கை வாளா இருக்க முடியுமா? கையால் மணலை முழங்கை ஆழத்திற்குத் தோண்டிக் கொண்டிருந்தேன். குறிப்பிட்ட ஓரளவு ஆழம் உண்டானதும் கையில் கெட்டிப் பொருள் ஒன்று தட்டுப்பட்டது. அதைத் தோண்டி வெளியே எடுத்தேன். அதைப் பார்த்ததும், முத்தணைந்த பெருமாள் என்பவர், ‘சண்முகம் ‘சிரட்ட’ எடுத்திருக்கிறான், என்று கூறினார். நான் எடுத்தது கொட்டாங்கச்சி, அவர் சொன்ன ‘சிரட்ட’ என்னும் பெயர் எனக்குத் தெரியாது. வடதமிழ் நாட்டில் இந்த வழக்கு இல்லை. பிறகுதான் ‘சிரட்டை’ என்னும் பெயர் நெல்லை மாவட்டத்தில் வழங்குவதை அறிந்தேன். ‘சிரட்டை' என்னும் பெயர், நெல்லை மாவட்டத்துப் பேச்சுத் தமிழிலும் மலையாளத்தில் எழுத்துத் தமிழிலும் ‘சிரட்ட’ என வழங்கப்படுகிறது.

தலச் சோறு

மலையாளத்தில் உள்ள ‘தலச் சோறு’ என்னும் பெயரும் என்னைக் கவர்ந்துள்ளது. மலையாளத்தில் தலச்சோறு