பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3. மலர்களும் மனையறமும்



மக்கள் மனையறம் - மனைவாழ்க்கை நடத்துவது போலவே மலர்களும் மனையறம் நடத்தி இன்ப வாழ்வு வாழ்கின்றன. மக்கள் ஆணும் பெண்ணுமா யிணைந்து இல்லறங் காத்து விருந்தோம்பி வேளாண்மை (உபகாரம்) செய்தல் போலவே, மலர்களும் செய்து வாழ்கின்றன. ஈண்டு மலர்கள் என்றால், சினையாகு பெயராகக்கொண்டு, மரஞ்செடி கொடிகளை யெல்லாம் குறித்துக்கொள்ள வேண்டும். இருப்பினும், குறிப்பிட்ட பயனாகிய மனையறப் பகுதி மலர்களின் வாயிலாகவே நடத்தவின் சிறப்பாக மலர்களைப் பற்றியே எடுத்துப் பேசி ஆராய்வோம்.

மனையறம் என்றால், கணவன், மனைவி, குழந்தைகள், விருந்தினர் முதலியோர் இருப்பர். 'இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு' என்ற வள்ளுவரின் வாய்மொழிப்படி, மனையறத் தால் பலர்க்கும் பலவகை நன்மைகளும் இருக்கும். அங்ஙனமெனின், மலர்களின் மனையற வாழ்க்கையில் கணவன் யார் - மனைவி யார் என முதலில் கண்டுபிடித்தாக வேண்டும். பிறகு பயன்களைப் பற்றிப் பார்க்கலாம்.

பொதுவில் புலவர்கள் சிலர் மலரை மனைவியாகவும், ஞாயிறு (சூரியன்) அல்லது திங்களை (சந்திரன்) கணவனா கவும் உருவகித்துப் பாடுவதுண்டு. காட்டாக, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, சூரியகாந்தி மலரை நோக்கி,