பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

45



எதையும் தாழ்வாக எண்ணுவதற்கில்லை. ஒரு சிறு புல்லானது தன் சிறு பூக்குலையை மேலே உயர்த்தி, தேன் துளியினையும் தாங்கி, ஈக்களை அழைத்துத் தேன் அருத்தி மகரந்தச் சேர்க்கை உண்டாகச் செய்து கருவுற்றுக் காய் கனிகளை ஆக்கிப் பலர்க்கும் பயனளிக்கிறது. இக்கருத்தை அவர் பாடியுள்ள

“இதோஒ! இக்கரை முளைத்த இச் சிறுபுல்
சதாதன் குறிப்பொடு சாருதல் காண்டி
அதன்சிறு பூக்குலை அடியொன் றுயர்த்தி
இதமுறத் தேன்துளி தாங்கி ஈக்களை
நலமுற அழைத்து கல்லூண் அருத்திப்
பலமுறத் தனது பூம்பராகம் பரப்பித்து
ஆசிலாச் சிறுகாய் ஆக்கி இதோ......?”

என்னும் மனோன்மணிய (மூன்றாம் அங்கம் - இரண்டாம் களம்) அடிகளால் அறியலாம்.

ஆகவே, அஃறிணைப் பொருளாகிய மலர்களே இவ்வாறு மனையறங் காத்து மாநிலத்திற்குப் பயன் பட்டுக்கொண்டிருக்க, அதே நேரத்தில், உயர்திணையாகிய மக்களுள் சிலர், நன்முறையில் மனைவாழ்க்கை நடத்தாமலும் பிறர்க்குப் பயன்படாமலும் வறிது கழிவதை எண்ணுங்கால், அம்மக்களினத்தைச் சேர்ந்த அனைவரும் வெட்கப்பட வேண்டுமன்றோ?