பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர சண்முகனார்

55


புத்தியுட னன்புசெய்து போதுசொரி வாரைப்
புணர்ந்துயிரி யாள்விரைசெய் போதிலுறை பூவே.” (100)

என்பன அந்நூற் பாடல்கள். இப்பாடல்களிலுள்ள 'கெடில மாநதியதன் வடபால்' 'கெடிலத்து வடபால்' என்னும் பகுதிகள், கெடிலத்தின் வடபுறத்தே திருக்கடை ஞாழல் என்னும் மாற்றுப் பெயருடைய திருப்பாதிரிப் புலியூர் இருப்பதாகத் தெரிவிக்கின்றன. ஆனால் இப்போது கெடிலத்தின் தென்புறத்தேதான் திருப்பாதிரிப் புலியூர் இருக்கிறது. எனவே, கெடிலம் திருப்பாதிரிப் புலியூருக்குத் தெற்கே வண்டிப்பாளையத்தினருகில் ஒடிக் கொண்டிருந்தபோது திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம்’ என்னும் நூல் தொல்காப்பியத் தேவரால் இயற்றப்பட்டது என்பது தெளிவு.

இலக்கணம் சிதம்பரநாத முனிவர் இயற்றிய திருப் பாதிரிப் புலியூர்ப் புராணம் என்னும் நூலிலும் இதற்குச் சான்று கிடைக்கிறது. திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம் நகருக்குத் தெற்கே கெடிலம் ஒடியபோது எழுதப்பட்ட தென முன்பு கூறினோம். ஆனால், திருப்பாதிரிப்புலியூர்ப் புராணமோ, கெடிலம் திசை மாற்றம் பெற்று நகருக்கு வடக்கே ஒடத் தொடங்கியபின் எழுதப்பட்டதாகும். முன்பு நகருக்குத் தெற்கே ஒடிய கெடிலம், பின்பு நகருக்கு வடக்கே ஒடத் தொடங்கியதற்குக் காரணமும் அப்புராணம் கூறுகிறது. அது வருமாறு:-

“மாணிக்கவாசகர் தென் திசையிலிருந்து வடதிசை நோக்கி, வழியிலுள்ள திருப்பதிகள் தோறும் சென்று இறைவழிபாடு செய்துகொண்டு வந்தார். தில்லையில் (சிதம்பரத்தில்) கூத்தப் பெருமானை வணங்கியதும், திருப்பாதிரிப்புலியூர் இறைவனை வணங்குதற்காக வடக்கு நோக்கி வந்து கொண்டிருந்தார். திருப்பாதிரிப்புலியூர்