பக்கம்:மனத்தின் தோற்றம்-ஆய்வுக் கட்டுரைகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

மனத்தின் தோற்றம்



திருப்பாதிரிப்புலியூரிலே விட்டு இருந்து, திருவதிகைத் திருவெக்கரை உள்ளிட்ட ஊர்களும் அழித்து, வாரண வாசி ஆற்றுக்குத் தெற்கு சேந்த மங்கலத்துக்கும் கிழக்கு கடலிலே அழி ஊர்களும் குடிக்கால்களும் சுட்டும் அழித்தும் பெண்டுகளை பிடித்தும் கொள்ளை கொண்டும் சேந்த மங்கலத்திலே எடுத்துவிடப் போகிற அளவிலே, கோப்பெருஞ் சிங்கன் குலைந்து சோழச் சக்கரவர்த்தியை எழுத்தருளிவிக்கக் கடவதாக தேவனுக்கு விண்ணப்பம் செய, இவர் விட்டு நமக்கும் ஆள் வரக் காட்டு கையாலே சோழச் சக்கரவர்த்தியை எழுந்தருளிவித்துக் கொடு போந்து ராஜ்யத்தே புக விட்டது.”

இந்தக் கல்வெட்டு வாயிலாக, போசள மன்னன் வீர நரசிம்மன் சோழனுக்குப் பரிந்து கொண்டு, கோப்பெருஞ் சிங்கனது ஆட்சியின்கீழ் இருந்த பல பகுதிகளைக் கண்டபடி தாக்கித் தீயிட்டு அழித்திருக்கிறான் என அறியலாம். இந்தக் கல்வெட்டின் இடையே ‘மகத ராஜ்ய நிர்ம்மூலமாடி’ என்றிருக்கும் பகுதியைக் கொண்டு, திருமுனைப்பாடி நாட்டின் ஒரு பகுதிக்கு ‘மகத நாடு’ என்னும் பெயர் அன்றிருந்தமை புலனாகும்.

தொண்டையர் கோமான் அடையவளைந்தான் என்னும் குறுநில மன்னனுடைய படை மறவரின் பெருமையை அறிவிக்கும் கல்வெட்டுச் செய்யுள் ஒன்று, தேவநாயகப் பெருமாள் கோவில் மேலைக் கோபுர வாயிலின் இடப்புறச் சுவரில் உள்ளது. இந்தச் செய்திகளையெல்லாம் அடிப் படையாகக் கொண்டு பார்க்குங்கால் அந்தக் காலத்தில் திருவயிந்திரபுரம் அரசியல் அரங்கில் பெற்றிருந்த சிறப்பிடம் புலப்படும். கோப்பெருஞ்சிங்கன் மூன்றாம் இராசராசச் சோழனைச் சேந்தமங்கலத்தில் சிறை வைத்திருந்ததன்றித் திருவயிந்திரபுரத்திலும் சில நாள் சிறை வைத்திருந்ததாகச்