பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27


கருவூலம் நெடுங்காலமாக என்பதனை உணர்கின்றோம்; நாம் தமிழர் என்பதனை அறிகின்றோம்; நானிலம் இதனை அறியச் செய்திடும் தொண்டு புரிந்திட உறுதி கொள்கின்றோம்.

பட்டம் பெற்றிடும் இத்திருநாள் உவகை பெற்றிடும் விழா நாள்; ஐயமென்ன? ஆயினும் உவகை பெற்றிட மட்டுமே அமைந்ததன்று; உறுதி கொண்டிடவும் உள்ளதோர் நன்னாள். நாட்டைக் காத்திடும் நல்ல பணிக்கு நம்மை நாமே ஒப்படைத்திருக்கின்றோம் என்பதனை உணரும் நாளே இந்நாள்.

மதுரைப் பல்கலைக் கழகம் ஓராண்டுப் பருவத்தில் உள்ளது.

நூற்றாண்டு விழா நடத்தி முடித்திட்ட பல்கலைக் கழகங்கள் உள்ளன--நம்நாட்டில்.

பத்தோடு பதினொன்று என்ற முறையினிலே அமைந்ததன்று, மதுரைப் பல்கலைக் கழகம்.

தமிழரின் தனித்தேவை ஒன்றினைக் கருத்திற் கொண்டு துவக்கப்பட்டதாகும் மதுரைப் பல்கலைக் கழகம்

நூறு ஆண்டுகட்கு முன்னர் பல்கலைக் கழகங்கள் துவக்கப்பட்டபோது, நாடு தன்னரசு இழந்து தலை கவிழ்ந்து இருந்தது. மக்கள் மனம் வெதும்பிக் கிடந்தனர்

பல்வேறு துறைகளிலே சீர்குலைவு; எங்கும் அறியாமை மட்டுமென்று; இந்நாட்டினர் ஏதும் அறிந்திட வல்லர் அல்லர் என்ற எண்ணம் கப்பிக் கொண்டிருந்த நிலை; இங்கு எவரும் இதற்கு முன்னர் நினைத்துப் பார்த்திருக்க முடியாத அறிவுக் கலைகளை மேனாட்டார் வகுத்தளிக்கின்றார் என்ற உணர்வு மேலோங்கிய நிலையுடன், பல்கலைக் கழகம் நுழைந்தனர்.