பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56


நாகரிகமான ஓரளவு வசதியோடு கூடிய வீடுகளில் வாழக்கூடும், மாளிகைகளில் மற்றொரு லட்சம் பேர் இருக்கக் கூடும். நாலு குடித்தனம் ஐந்து குடித்தனம் என்றுள்ள வீடுகளில் ஐந்தாறு லட்சம் பேர் இருப்பார்கள். மற்றுமுள்ளோர் எங்கெங்கெல்லாமோ வாழுகிறார்கள்.

நான் யாரையாவது அழைத்து அந்தக் கூவம் நதியோரம் போய் குடியிரு என்றால் என் கன்னத்தில் அறைவான். ஆனால் யாரும் சொல்லாமலே அங்கே அவர்களாகவே வாழுகிறார்கள்; நாற்றமாயிற்றே என்றால் ஏதோ ஒரு நாளில் அரை மணி--கால் மணி அப்படியிருக்கும் என்கிறார்கள். இவர்கள் இப்படி குடியிருப்புக்காக வேண்டி இருக்கும் நாற்றத்தையும் இல்லை என்கிறார்கள்.

இவர்களது குடிசைகளை வெளிநாட்டார் பார்த்தால் நம்மைப்பற்றி மிகத்தாழ்வான கருத்தைக் கொள்வார்கள். ஆகையினால் தான் கூவத்தின் நாற்றத்தைப் போக்கி சேற்றை வாரி கூவத்தை எழிலுடையதாகச் செய்திட திட்டமிட்டுள்ளோம்.

லண்டனுக்கு நான் போனதில்லை. போய் வந்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். லண்டன் நகருக்கு அழகைக் கூட்டுவது அத்நகரின் பெரும் பகுதியில் ஊடுருவிச் செல்கிற தேம்ஸ் நதி என்பதாகும். அதுபோல கூவம் சென்னை நகரின் மையப்பகுதியில் இருக்கிறது. ஏனோ இந்த எளிய திட்டம் என்னைவிடப் பெரியவர்கள் வல்லவர்கள் ஆண்ட நாட்களிலே செய்யப்படாமலே இருந்தது; எளிய காரியம் தானே என்று இருந்துவிட்டார்கள் போலும் நாங்கள் சின்னவர்களென்பதால் சிறிய விஷயங்களெல்லாம் என் கண்ணுக்குப்படுகிறது. கூவம் ஆற்றைச் சுத்தப்படுத்தும் அப்பணியின் மூலம் நோய் நொடிகள் நீங்கும், சுகாதாரம் ஓங்கும்.

இதைப்போலவே காவிரி நீர் திட்டம் நீண்ட நாட்களாகப் பேசிப் பேசி நிறுத்தப்பட்டதே தவிர நடைமுறைக்கு வரவில்லை.