93
“மேருவை நிறுத்தி வெளி
செய்தது கொல்? விண்ணோர்
ஊர்புக அமைத்த படுகால் கொல்?
உலகு ஏழும்
சோர்வில நிலைக்க நடுவிட்ட
தொரு தூணோ?
நீர் புகு கடற்கு வழியோ?”
என நினைத்தான்.
அந்தக் கோபுர வாயிலைப் பார்த்த உடனே என்ன நினைத்தான்? “இது என்ன மேருவைத் தூக்கி நிறுத்திவைத்து அதிலே கோபுரவாயில் எனும் இடைவெளி செய்யப் பட்டதோ? விண்ணோர் இலங்கை புக வைத்த ஏணியோ? ஏழுலகங்களும் தளராமல் நிலைத்திருக்கும் பொருட்டு நடுவிலே முட்டுவைத்த தூணோ? கடலிலே நீர் சென்று புக அமைத்ததொரு வழியோ?” எனப் பலவாறு சிந்தித்தான்.
***
மேருவை நிறுத்தி வெளி செய்தது கொல்? - மேரு மலையைக் கோபுரமாக நிற்கச் செய்து (அதன் வாயிலாக) இடைவெளி உண்டாக்கியதோ? (அன்றி) விண்ணோர் ஊர் புக அமைத்த படுகால் கொல் -தேவர்கள் இலங்கை புக அமைத்த ஏணியோ? உலகு ஏழும் சோர்வில நிலைக்க நடுவிட்டதொரு தூணோ?- ஏழு உலகங்களும் தளர்வற்றனவாய் நிலைத்து நிற்கும் பொருட்டு நடுவே கட்டிவிட்ட ஒரு தூணோ? கடற்கு நீர்புகு வழியோ? கடலிலே நீரைப் புக விடுதற்கு அமைத்த ஒரு வழியோ?—என நினைத்தான் என்று அநுமன் எண்ணினான்.
***