உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192



தேவியை நாடி வந்த செங்கணாற்கு
        எங்கள் கோமான்
ஆவி ஒன்றாக நட்டான்;
        அருந்துயர் துடைத்தி என்ன
ஓவியற்கு எழுத ஒண்ணா
        உருவத்தன் உருமையோடும்
கோவியல் செல்வம் முன்னே
        கொடுத்து வாலியையும் கொன்றான்

இராமபிரான் தனது தேவியைத் தேடி வந்தான் சுக்ரீவன் அவனுடன் ஆருயிர் நட்புக் கொண்டான். வாலியினால் தனக்கு ஏற்பட்ட துன்பம் போக்குமாறு கேட்டுக்கொண்டான் சுக்ரீவன். அவனது மனைவியாகிய உருமையையும் அரச பதவியையும் அளிப்பதாக வாக்குறுதி கொடுத்தான் இராமன். வாலியைக் கொன்றான்.

***

தேவியை நாடி வந்த – தன் தேவியாகிய சீதையைத் தேடிக்கொண்டு வந்த; செங்கணாற்கு – சிவந்த கண்களை உடைய இராமபிரானுக்கு; எங்கள் கோமான் – எங்கள் தலைவனாகிய சுக்ரீவன்; ஆவி ஒன்று ஆக – இருவரும் ஓர் உயிர் போல; நட்டான் – நட்புக் கொண்டான்; அரும் துயர் துடைத்தி என்ன – வாலியால் தனக்கு ஏற்பட்ட பெரும் துன்பத்தை நீக்கி அருள வேண்ட; ஓவியர்க்கு எழுத ஒண்ணா உருவத்தன் – சித்திரம் எழுதுவோர் எழுத முடியாது திகைக்கும் உருவம் கொண்ட இராமன்; உருமையோடும் – சுக்ரீவன் மனைவியாகிய உருமையோடு; கோ இயல் செல்வம் – வானர அரசுக்கு இயல்பாக அமைந்த அரசு செல்வத்தையும் முன்னே உறுதியளித்து; வாலியையும் கொன்றான் – வாலியையும் கொன்றான்.

***