பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

267






செப்டம்பர் 7


இறைவா, நான் வலிமையுடையோனாக வேண்டும்! அருள்க!

இறைவா, தனக்குவமையில்லாத் தலைவனே! போற்றி! போற்றி! நான் நிலையாக முற்றாக எனக்கு விருப்புடையதாகிய தற்சார்பை அடையவில்லையே? இறைவா, என் வலிமை என்னிடத்திலேயே இருக்கிறது. ஆனால் நானோ புறத்திலேயே தேடிக் கொண்டிருக்கிறேன்.

இறைவா, நான் வாழ என் வலிமை துணை செய்யும்! நான் வெளிப்புறத்தில் தேடும் வலிமைகள் கடைசிவரையில் துணை நில்லா. இறைவா, நான் தனியனாகவே வலிமையுடையோனாக வேண்டும். என் அறிவு வளர்ந்து வலிமை பெற்று விளங்க வேண்டும்.

இறைவா, என் உடல் எஃகினும் வலிமையுடையதாக விளங்க அருள் செய்க! என் மனம் நன்னிலையில் நிலை திரியாது மலையென நிற்கவேண்டும். என் சித்தம் தடுமாறாது தகுதியின் பாற்பட்டொழுகும் நிலையில் இருத்தல் வேண்டும்.

என் புத்தி பேதலித்தல் கூடாது! என் புத்தி துணிவுடையதாக விளங்கவேண்டும். என் செயற்புலன் அகங்காரம் எந்த நிலையிலும் செயற்படுதல் வேண்டும். இறைவா, இங்ஙனம் அருள் செய்க!

நான் என் உடலினை உணவாலும் பயிற்சியாலும் ஒழுக்கத்தாலும் திறனுள்ளதாகப் பேண வேண்டும். நாளும் கற்று, என் அறிவை விரிவாக்கிக் கொள்வேன். என் மனம் என் வசம் இருக்கும். என் புத்தி தடுமாறாது. சிந்தனை ஒரு நிலையானது; என் பொறி, புலன்கள் ஒரு ஆணைவழி நிற்கும்! - இது உறுதி ஐயனே!

என்னை என்காலில் நிற்கச் செய்த கடவுளே! என் வலிமையைக் காத்தருள் செய்க! நான் என் வலிமைக்கு உன்னைத் தேடுவதா? கூடாது. ஆயினும் நீ வெளியே உள்ள பொருள் அல்ல. நீயும் என் அகத்திலிருக்கும் அழியாப் பொருள்! இறைவா, அருள் செய்க!