பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மண்ணும் மனிதர்களும்

னிதன் வளர சுதந்திரம் தேவை. மனிதன் சுதந்திரத்துடன் பிறக்கிறான். அளவற்ற சுதந்திரத்துடன் பிறக்கிறான். ஆயினும் காலப்போக்கில் அவன் அடிமை ஆகிறான். அடிமை ஆக்கப்படுகிறான். ஏன் இந்த அவலம்? உடலின் முதல் முக்கியத் தேவையாகிய மூச்சுக்காற்று இலவசமாகக் கிடைக்கிறது. அந்தக் காற்றை யாரும் சிறைப்படுத்தவில்லை. இது நமது இஷ்டம் என்றே கூறவேண்டும். எதிர்காலம் எப்படியோ? அதுபோலவே ஆன்மாவின் முதல் தேவை அறிவு! இந்த அறிவைத் தரக்கூடிய கல்வி, அறிவு எல்லோருக்கும் வேண்டும்; அவசியம் வேண்டும், பாரதியை அறம் எது என்று கேட்டால் அவன் 'அன்னசத்திரம் அமைப்பதிலில்லை. ஆலயங்கள் ஆயிரம் கட்டுவதிலில்லை. இவை எல்லாவற்றிலும் சிறந்த அறம் கல்வி வழங்கலே' என்றான். வாழும் மாந்தருக்குக் கல்வி அறிவு தரும் பொறுப்பைச் சமூகம் ஏற்க வேண்டும்; அரசு ஏற்க வேண்டும் என்ற நடைமுறை பிறந்தது. கல்விக்குச் செலவிடும் தொகை செலவல்ல; அது ஒரு முதலீடு என்ற எண்ணம். நமது சமூகத்தில் வளர வேண்டும். அரசின் தலையாய கடமை கல்வி தருதல், ஆனால், இன்று கல்வி விற்கப்படுகிறது. சராசரி விலையல்ல, பல லட்சங்கள்! இன்று கல்வி நிறுவனம் நடத்துதல் ஒரு தொழில் போலாகிவிட்டது. கல்விப் பணியில் ஆர்வம் இல்லை. சிரத்தை இல்லை! பணம் பண்ணுதலே குறிக்கோள் ஆகிவிட்டது!

மனிதனுக்குக் கல்வி வழங்கல் பணியில் பள்ளிகள், கல்லூரிகள் மட்டும் ஈடுபடவில்லை. நூலகங்கள், வாசக சாலைகள் அமைத்து எல்லோருக்கும் பழகும் வாய்ப்பளித் தலும் கல்விப் பணியே! தரமான செய்தித்தாள்கள், திங்களிதழ்கள் படித்தல் அறிவு வளர்ச்சிக்குத் துணை செய்யும்.