170
சங்க இலக்கியத்
“வேந்திடை தெரிதல் வேண்டி, ஏந்துபுகழ்
போந்தை, ஆரே, வேம்பென வருஉம்
மாபெருந் தானை மலைந்த பூவும்”
-தொல். பொருள்: 60 : 2-5
மேலும், ‘மூவேந்தர்கள் தமது குடிப் பூக்களைச் சூடிக் கொண்டு வரினும்’ என்று புறநானூறு குறிப்பிடுகின்றது.
“................ கருஞ்சினை
வேம்பும், ஆரும், போங்தையும் மூன்றும்
மலைந்த சென்னியர் அணிந்த வில்லர்”-புறநா: 338 : 5-7
வேம்பு ஒரு பெரிய மரம். இதில், கருவேம்பு, நில வேம்பு, மலை வேம்பு, சருக்கரை வேம்பு எனப் பல வகைகள் உள்ளன. பொதுவாக, வேம்பு என்பது கருவேம்பைக் குறிக்கும் என்பதைப் பின் வரும் அடிகளிற் காணலாம்.
“கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர்”-குறுந்: 24 : 1
“கருஞ்சினை விறல் வேம்பு”-பதிற்: 49 : 16
வேப்பம்பூ வெண்ணிறமானது. கொத்தாகப் பூக்கும் இயல்பிற்று. இது ‘கவரி போல் பூ பூக்கும்’ என்பது வழக்கு. இதனைப் பாலை நிலப் பூவென்பர். இளவேனிற் காலத்தில் பூக்கும். நல்லதொரு மணம் உள்ளது. புத்தாண்டில் இதனைச் சூடியும், வேப்பம்பூச் சாறு கூட்டியுண்டும் மகிழ்வர்.
புறப்பணிக்குப் பிரிந்த தலைவன் வந்து சேரவில்லை. தலைவி இளவேனிற் காலம் வந்ததையுன்னி உள்ளம் வெதும்புகின்றாள். வீட்டு முன்றிலில் வேம்பு பூத்துக் குலுங்கி ஆண்டின் புதிய வருவாயினை அறிவிக்கின்றது. அதனைக் கொய்து சூடாமலும், வேம்பின் பூக்கொண்டு சாறு வைக்காமலும், பூக்கள் வறிதே கழிகின்றதை அவளால் தாங்க முடியவில்லை.
“கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர்
என்ஐ இன்றியும் கழிவது கொல்லோ”-குறுந்: 24 : 1-2
என்று கூறிக் கவல்கின்றாள். மேலும் இம்மலர்கள் உதிர்ந்து கொட்டுகின்றன. இளவேனில் முடியும் அறிகுறியாகக் காணும் தலைமகள், “அவன் வரவில்லையே” என்று கூறி ஏங்குகின்றாள் என்பது இளவேனிற்பத்து.