71
முலைக்கு உவமிக்கப்படுவது. முகை விரிந்து மலரும் என்று கூறுவர் பரணர்.
“வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்
முகைவனப்பு ஏங்திய முற்றா இளமுலை”
-புறநா. 366 : 9-10
இதனை இங்ஙனமே கூறும் கலித்தொகையும்.
“................ கோங்கின்
முதிரா இளமுலை ஒப்ப எதிரிய
தொய்யில் பொறித்த வனமுலையாய்” -கலி. 177 : 2-4
கோங்கம் விரிந்து மலருங்கால் திருகுப்பூ போன்றிருக்கும். கைத்தொழிலில் வல்ல கம்மியன் அரதனக் கற்களை இட்டு இழைத்த பொன்னாலாகிய சுரிதகம் (திருகுப்பூ) என்னும் அணி போன்ற வடிவினவாகிப் பெரிய கோங்க மரத்தினது குவிந்த முகைகள் மலரும் என்பர் நக்கீரர்.
“கைவல் வினைவன் தையுபு சொரிந்த
சுரிதக உருவின ஆகிப் பெரிய
கோங்கம் குவிமுகை அவிழ”-நற். 86 : 5-7
குவிந்த கோங்கின் முகை விரிந்து மலருங்கால், குடை போன்றிருக்கும். இதழ்கள் மெல்லியவை. புல்லியவை. இப்பூக்கள் தொடர்ந்து பூத்திருக்கும் போது, கார்த்திகைத் திங்களில் ஏற்றப்படும் விளக்கு வரிசை போலக் காட்சி தரும்.
மேலும், வானத்து ஒளிரும் விண்மீன்களின் நினைவை எழுப்பும் என்பர் பாலை பாடிய பெருங்கடுங்கோ.
“புல்லிதழ்க் கோங்கின் மெல்லிதழ்க் குடைப்பூ
வைகுறு மீனின் நினையத் தோன்றி”-நற். 48 : 3-4}}
“அறுமீன் பயந்த அறம்செய் திங்கள்
செல்சுடர் நெடுங் கொடிபோல
பல்பூங்கோங்கம் அணிந்த காடே”-நற். 202 : 9-11
கோங்க மலரின் உள்ளே நடுவண் அமைந்த பொகுட்டு, எலியின் வளைந்த காது போன்றதென்றார் தாமோதரனார்.
“வேனிற் கோங்கின் பூம்பொகுட் டன்ன
குடந்தையஞ் செவிய கோட்டெலி”-புறநா. 321 : 4-5