பக்கம்:தமிழகத்தில் குறிஞ்சி வளம்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

191

இது தங்கிப் பயிலும் பள்ளி. இதில் 550 மாணவர்களே தங்கிப் பயில இடமுண்டு. 5 வயது முதல் 9 வயது வரை உள்ள இளமாணவர் பிரிவு (Preparatory School), ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவு என இப்பள்ளி முப்பிரிவுகளைக் கொண்டது. இம் முப்பிரிவினர்க்கும் தங்குமிடங்கள் தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளனவேயன்றி, ஆண்களும் பெண்களும் ஒன்றாகவே பயில்கின்றனர். குடும்பக்கலை (Demestic Science) முதலிய பெண்களுக் குரித்தான கலைகளும், பொழுது போக்குக் கலைகளும் தனியாக அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு விடுதியும் ஒரு குடும்பம் போன்ற முறை (House ---System)யிலேயே நடத்தப்படுகிறது. இங்கு மிகவும் சிறந்த ஆங்கிலக் கல்வி பயிற்றப்படுகிறது. ஆங்கிலத்திற் கடுத்தாற்போல், இந்தி கட்டாய பாடமாகக் கற்பிக்கப்படுகிறது. இங்கு மேலை நாட்டு இசைக்கலையும், இந்திய இசைக்கலையும் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. இசைக் கலையைப் பாடமாக எடுத்துக்கொண்ட எல்லா மாணவர்களும் பியானோ, வயலின் ஆகிய இசைக் கருவிகளை இசைக்கக் கற்றுக்கொடுக்கப்படுகின்றனர். மேலை நாட்டு இசையில் நல்ல தேர்ச்சியும், ஆர்வமுமுள்ள மாணவர்கள் இலண்டன் டிரினிடி கல்லூரி இசைத்தேர்வுக்கு அனுப்பப்படுகின்றனர். மட்டைப் பந்து (Tennis), துடுப்புப் பந்து, (Cricket), கூடைப் பந்து (Basket ball), கால்பந்து (Foot ball), கைப் பந்து (Volley ball), வலைப்பந்து(Net ball), தடிப்பந்து (Hockey) முதலிய விளையாட்டுக்கள் இங்குக் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. அனுபவம் வாய்ந்த ஓராசிரியர் குதிரை ஏற்றமும் மாணவர்கட்குக் கற்றுக்கொடுக்கிறார். ஆனால், அதற்குத் திங்கள் தோறும் ரூ. 20 தனிக் கட்டணமாகச் செலுத்தவேண்டும். சமயக் கல்வியும் இங்குப் பயிற்றப்படுகிறது.