சேசு பொழிந்த தெள்ளமுது
மேதினிக்குச் சேசு நாதர் எதற்கடி
தோழி - முன்பு
வெம்மைகொள் மக்களைச் செம்மை புரிந்திடத்
தோழா - அவர்
காதினிக்கும் படி சொன்னசொல் ஏதடி?
தோழி - அந்தக்
கர்த்தர் உரைத்தது புத்தமு தென்றறி
தோழா - அந்தப்
பாதையில் நின்று பயனடைந்தார் எவர்
தோழி - இந்தப்
பாரதநாட்டினர் நீங்கிய மற்றவர்
தோழா - இவர்
ஏதுக்கு நன்மைகள் ஏற்கவில்லை உரை
தோழி - இங்கு
ஏசுவின் கட்டளை நாசம்புரிந்தனர்
தோழா.
ஏசுமதத்தினில் இந்துக்கள் ஏனடி?
தோழி - அந்த
இந்துக்கள் தீயிட்ட செந்துக்கள் ஆயினர்
தோழா - மிக
மோசம் அவர்க்கென்ன வந்தது கூறடி
தோழி - அட
முன் - மனு என்பவன் சொன்னதில் வந்தது
தோழா - அவன்
நாசம் விளைக்க நவின்றது யாதடி
தோழி - சட்டம்
நால் வருணத்தினில் நாலாயிரம் சாதி
தோழா - ஏசின்
ஆசை மதம்புகப் - பேதம் அகன்றதோ?
தோழி - அவர்க்
கங்குள்ள மூதேவி இங்கும் முளைத்தனள்
தோழா.
***