பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

திருக்குறள்



முறை-ஒழுங்கு, ஆளும் நெறி; உறை-மழை; கோடி-தவறி; வானம்-மேகம்; பெயல் ஒல்லாது-பெய்தலைச் செய்யாது;. கொடுங்கோல் ஆட்சியினால் இயற்கை நியதிகளும் மாறி விடும் என்பது கருத்து. 559

10.ஆபயன் குன்றும்; அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.

அரசன் குடிமக்களை முறைப்படி காவா விட்டால், பசுக்கள் பால் தருவது சுருங்கி விடும் : அந்தணர்களும் அற நூல்களை மறந்து விடுவர்.

ஆ பயன்-பசுவினிடமிருந்து பெறப்படும் பால் ஆகிய பயன்; குன்றும்-குறையும்; அறுதொழிலோர்-அந்தணர்; நூல்-அறநூல் அல்லாத வேதம்.

ஆபயன் என்பதற்கு முயற்சியால் ஆகும் பயன் என்றும் பொருள் கூறுவர். 'அறிதொழிலோர்’ என்றும் பாட பேதம் உண்டு. அறிதொழிலோர் என்பதற்கு ஓதி அறியும் தொழிலையுடைய புலவர் என்றும் பொருள் சொல்லுவர். 560


57. வெருவந்த செய்யாமை


1.தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.

ஒருவன் குற்றம் செய்யின் அந்தக் குற்றத்துக்குத் தகுந்தபடி ஆராய்ந்து பார்த்து, மீண்டும் அவன் குற்றம் செய்யாதபடி அந்தக் குற்றத்துக்கு ஏற்ப அவனைத் தண்டிப்பவனே அரசன் ஆவான்.

தக்காங்கு-தகுந்தபடி; நாடி-ஆராய்ந்து பார்த்து; தலைச் செல்லா வண்ணம்-மீண்டும் அக்குற்றத்தை அவன் செய்யாதபடி; ஒத்தாங்கு-பொருந்திய வகையில், ஏற்றபடி; ஒறுத்தல்- தண்டித்தல்.

வெருவந்த செய்யாமை-அஞ்சத்தக்க செயல்களைச் செய்யாதிருத்தல். 561