பக்கம்:நமக்கு நாமே உதவி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நமக்கு நாமே உதவி

61


ஆகவே தான், சாதனையாளர்கள் என்னும் புகழுடன் சரித்திரம் படைத்து விடுகின்றார்கள்.

இலட்சியமே ஒருவரை, எப்படிப்பட்டவராக அவர் விளங்கினாலும், வலிமையாளராக மாற்றி விடுகிறது.

இலட்சியம் தான் ஒருவரை இணையிலா செயல் வீரராக ஆக்கி விடுகிறது.

மண் வீடு கட்டி முடித்து விட்டு, அது காற்றில் கலைந்து விழும்போது, கண் கலங்கிக் கவலைப்படுபவராகத்தான் பலர் வாழ்கின்றார்கள்.

காகிதத்தில் கப்பல் செய்து நீரில் மிதக்க விட்டு அது நீருள் மூழ்கும்போது நொந்து மனத்தால் நைந்து போகின்ற மனிதர்களாகத் தான் பலர் வாழ்கின்றார்கள்.

பனிக்கட்டியால் சிலை செய்து, அது வெயிலின் கொடுமையால் கரைந்து விழும்போது, கதறுகின்ற மாக்களாகத்தான் பலர் இன்றும் காட்சியளிக்கின்றார்கள்.

ஒரு மனிதனின் வாழ்வு எப்படி அமைய வேண்டும் என்று இப்பொழுது எண்ணிப்பார்ப்போம்.

ஒருவனது பார்வையில் அவனது வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்பது தான் முதற்படி.

அந்தப் பார்வை வழியே, எதிர்காலம் அமைய வேண்டும் என்று விரும்புவது இரண்டாம் படி.