பக்கம்:நூறாசிரியம்.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

320

நூறாசிரியம்


71 வேண்டுமென் நெஞ்சே!


யாண்டவ னாயினும் மாண்டுப் பீடொடு
வேண்டுவ சுரக்கும் வியன்றமிழ்க் கல்வி
துறையறப் போகித் துணிந்து குறையற
வடித்துவந் தளிக்கும் வாயி னானை
மிடிந்தார்க் கிரங்குஞ் செவியி னானை 5
வாய்ந்தார்க் கருளுந் தோளி னானைத்
தோய்ந்தார்க் குரித்த மார்பி னானைக்
குணங்குயர் காட்சி வணங்குறு வாழ்வின்
சான்றோர்க் கினித்த சொல்லி னானை
ஈன்றோர் தவிர்க்கினும் வேண்டுமென் நெஞ்சே! 10


பொழிப்பு:

அவன் எவ்விடத்தானாயினும் மாட்சியமையால் செம்மாந் திருத்தலோடு தேவைப்படுங் கருத்தைத் தருகின்ற பெருமைசான்ற தமிழ்க் கல்வியைக் கற்றுத் தேர்ந்து முடிபு கண்டு, குறையின்றித் தெளிவுபட இனிது எடுத்துரைக்கும் வாயையுடையவனை; வறியார்பால் இரக்கங்கொண்டு அவர்தம் வேண்டுகோளை ஏற்கும் செவியையுடையவனை ஆற்றாமை வாய்ந்தவர்கட்கு அருள் செய்யும் தோளை யுடையவனை நட்புப் பொருந்தியவர்கட்கு உரிமையாக்கப்பட்ட மார்பை யுடையவனை, சிறு தெய்வங்களினும் மேம்பட்ட இறைமைக்காட்சியில் ஒன்றியவரும் உலகத்தவரால் வணங்கப்பெறும் மெய்வாழ்வினருமான சான்றோர் பெருமக்களுக்கு இனிமைபயக்கும் சொல்லைப் பேசுபவனைப் பெற்றோர் தவிர்த்தாலும் என் நெஞ்சம் விரும்புகிறது.

விரிப்பு:

இப்பாடல் அகப்பொருள் சார்ந்தது.

தலைமகன்பால் காதல்கொண்ட தலைவி, தன் பெற்றோர் அவனை மணமகனாக ஏற்காது தவிர்த்து வேறுமணம் பேச முற்பட்டகாலைத் தலைமகனின் கல்விச் சிறப்பும் சொன்வன்மையும் சான்றாண்மைப் பண்புகளும் எடுத்துக்கூறி அவனை விரும்பும் தன் காதல் நெஞ்சத்தைத் தோழிக்குப் புலப்படுத்துவதாக அமைந்தது இப் பாட்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/346&oldid=1221202" இலிருந்து மீள்விக்கப்பட்டது