பக்கம்:பாரதிதாசன் கவிதைகள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91.வாரீர்!

இந்தி எதிர்த்திட வாரீர்! - நம்
இன்பத் தமிழ்தனைக்காத்திட வாரீர்! (இந்தி)

முந்திய காலத்து மன்னர் - நம்
முத்தமிழ் நாட்டினில் தொத்திடு நோய்போல்
வந்த வடமொழி தன்னை - விட்டு
வைத்தத னால்வந்த தீமையைக் கண்டோம்! (இந்தி)

செந்தமிழ் தன்னில் இல்லாத பல
சீமைக் கருத்துக்கள் இந்தியில் உண்டோ?
எந்த நலம்செய்யும் இந்தி - எமக்
கின்பம் பயப்பது செந்தமி ழன்றோ! (இந்தி)

தென்னாடு தான்எங்கள் நாடு! - நல்ல
செந்தமிழ் தான்எங்கள் தாய்மொழி யாகும்!
புன்மைகொள் ஆரிய நாட்டை -எங்கள்
பொன்னாட்டி னோடு பொருத்துதல் ஒப்போம்! (இந்தி)

இன்னலை ஏற்றிட மாட்டோம் - கொல்லும்
இந்தியப் பொதுமொழி இந்திஎன் றாலோ
கன்னங் கிழிந்திட நேரும் வந்த
கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம்! (இந்தி)

***