110
புது மெருகு
யுள்ள சம்பாஷணையைக் கவனித்து ரசித்து வந்தாள். எம்பெருமான் கவிராயருடைய பெருமையையும் தக்கை ராமாயணச் சிறப்பையும் பற்றிப் பேசினார்கள். கம்ப ராமாயண நயம் இடையே வந்தது. தமிழ்ப் பாடல்களும் புலவர்களைப்பற்றிய செய்திகளும் வந்தன. ஒவ்வொருவரும் தத்தமக்குப் பிரியமான செய்திகளைச் சொல்லிக்கொண்டு வந்தார்கள். பேச்சு மெல்ல மெல்லப் பெண்களைப்பற்றிய விவகாரத்தில் திரும்பியது. "பெண்கள் தனியே வாழ முடியாது. எண்ணறக் கற்று எழுத்தற வாசித்தாலும் பெண்புத்தி பின்புத்திதான்" என்றார் ஒருவர்.
"பேதையரென்ற பெயரே அவர்களுடைய அறியாமையைப் புலப்படுத்தவில்லையா?" என்றார் மற்றொருவர்.
"தெரியாமலா பரிமேலழகர், 'அறிவறிந்த மக்கள்' என்ற திருக்குறளுக்கு 'அறிவறிந்த என்பது பெண்ணொழித்து நின்றது' என்று எழுதினார்?" என்று ஆதாரங் காட்டினார் வேறொருவர். இதுவரையில் அவர்களுடைய பேச்சிலே இன்பங்கண்டு நின்ற பூங்கோதைக்கு, பெண்களை அவமதிக்கும் இந்த அதிகப் பிரசங்கத்தைக் கேட்கச் சகிக்கவில்லை. அவர்களோ மேலும் பெண்களை இழிவாகப் பேசலானார்கள். ஒருவர் பாடல் சொல்கிறார்; ஒருவர் உரையைக் காட்டுகிறார்; வேறொருவரோ புராண இதிகாசக் கதைகளை உதாரணமாக எடுத்துச் சொல்கிறார்; மற்றொருவர் தம்முடைய அநுபவத்திலே அறிந்த நிகழ்ச்சியை விளக்க ஆரம்பித்தார்.
கவிராயர் மனைவிக்குக் கோபம் கோபமாக