எவனினி அவனை இறைஞ்சா தொழிவன் ?
அவனை இனி அவ்விதம் இறைஞ்சிடின்
தவறா துனக்குச் சப்பாத் தடிதான் என்று மொழிந்தான்! இம்மொழி கேட்டதும்
'நன்று நன்' 'றென நவின்றுநம் ராமன்
சென்றனன் உள்ளம் கன்றியே மிகவும்.
சிறைசார் கைதியுள் திறமிகு மூவரை
மறைவினில் விளித்து மற்றவர் தம்பால்
நடந்ததைக் கூறி விடந்தனை ஒத்தபாழ்
ஜெயிலர், சூப்பியல் டெண்டு, டாக்டர்
இவர்மூ வரையும் மறு நாட் பார்வையில்
கொன் றிட வேண்டும் என்றனன் ராமன்,
சரியெனக் கூறினர் சார்ந்த அம் மூவரும்.
அரிவாள் மூன் றவர்க் கமைத்துக் கொடுத்தான்
அந்தச் செய்தியை ஆறுமுகம் பிள்ளை
அந்த இரவினில் அறிந்தான் ; ராமனை
விளித்துப் "பிள்ளையை மேவா தெதுவும்
இயற்றல் பிழை”யென் றியம்பி அது நிறுத்தினான்,
அடுத்த நாயிறில் அறைந்த மூவரும்
அடுத்தனர் என்னறை, அனைத்தும் கூறினர்.
அனுமதி தருக ஐயா என்றனர்.
மறுமொழி சொலாது “மற்றவர் தம்பால்
சூப்பிரண் டெண்டும் சொல்லிய டாக்டரும்
கைதிகள் தம்மைக் காப்ப தல்லது
செய்த துண்டோ தீங்குகள் என்றேன்.
செய்த தின்றெனச் செப்பினர் மூவரும்.
பக்கம்:1911 AD paper copy-சுய சரிதை, வ. உ. சிதம்பரம் பிள்ளை, 1946 print copy.pdf/126
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
121