பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26


எந்நாடாயினும், இடரிலும், இழிவிலும் படாமல் இருளகன்று ஏற்றம் பெற்று இருந்திட வேண்டுமெனில் அந்நாட்டினில் தொடர்தொடராய், அறிவாளர் தோன்றிய வண்ணம் இருந்திட வேண்டும்; நன்று இது, தீது இது, நமதிது, பிறர் தந்ததிது, மரபு இது, மருள் இது என்பதனை ஆய்ந்தறிந்து கூறுவதற்கும் அவ்வழி நடந்து மக்கள் மாண்பினைப் பெற்றிடச் செய்வதற்கும் ஆற்றல் மிக்க அறிவுப் படை எழுந்தபடி இருக்க வேண்டும்! அதற்கான பயிற்சிக் கூடம் வேறெதுவாய் இருந்திட முடியும்? இஃதே அப்பயிற்சிக் கூடம், பல்கலைக் கழகம். நாடு பல்வளமும் பெற்றிடும் நற்கலையைக் கற்றிட அமைந்துள்ள நக்கீரக்கோட்டம்.

1964-66-ஆம் ஆண்டுத் தேசியக் கல்விக் குழுவினர் இதனை வலியுறுத்திக் கூறியுள்ளனர். எவருக்கும் கட்டுப்படாமல், இழுப்பார் பக்கம் சாய்ந்து விடாமல் சிந்தித்து உண்மை. அறிந்து, அறிந்ததனை விளக்கமுடன் எடுத்துரைத்து ஆளடிமையாகாமல், அச்சமற்று நிற்போரை அளிப்பதற்கே பல்கலைக்கழகம் என்ற கருத்துப்பட அக்குழுவினர் கூறியுள்ளனர்.

ஆய்தறிதல் வேண்டும்; அதற்கேற்ற அஞ்சாமை வேண்டும்; இன்றேல், சிந்தனையைச் சிறையிலிட்டுக் கொடுமையைக் கோலோச்சச் செய்வதற்கு உடந்தையானோர் ஆகிவிடுவோம்--என்றுரைக்கிறார்--எச்சரித்திருக்கிறார் பெர்ட்ராண்டு ரசல் எனும் பெருமகனார்.

தமிழ்ச் சான்றோரின் நல்லுரைகளைத்
தரணி அறிந்திடச் செய்வோம்!

ஈராயிரம் ஆண்டுகட்கும் முன்னர் இங்கு அமர்ந்திருந்த புலவோர்கள் கூறிச் சென்றார்கள், இவை போன்ற ஏற்றமிகு நல்லுரைகள் பற்பலவற்றை! இடையில் அவை மறந்தோம், அவ்வலுற்றோம். இன்று அவனியின் பிற பகுதிகளிலுள்ள ஆன்றோர் அதனை அறிவிக்கின்றார்; நமக்குண்டு அந்தக்