பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

உயர் மடல் ஏற:

அப்படியே என்றாலும், தெங்கில் ஏறிக் கொண்டன என்று கூறுவதோடு புலவர் விட்டாரா? இல்லை யில்லை! தெங்கின் உயர் மடல் ஏறியதாகக் கூறியுள்ளார். தென்னை மரத்தில் அன்னங்கள் ஏறிக் கொண்டன என்றால், அதன் மடலில் (மட்டையில்) ஏறிக் கொள்வதைத்தான் குறிக்கும். தென்னையின் மட்டைகளுக்குள் மிகவும் நாள்பட்ட மட்டைகள் பழுத்துக் கீழ் நோக்கித் தொங்கிக் கொண்டிருக்கும். எனவே, தொங்கும் மட்டையில் அன்னங்கள் அமர முடியாது. நடுத்தரமான மட்டைகளோ பக்கவாட்டத்தில் நீட்டிக்கொண்டிருக்கும். அத்தகு மட்டைகளிலும் அன்னங்கள் அமர விரும்பவில்லை. ஆனால், புதிய பச்சிளங் குருத்து மட்டைகளோ, மேல் புறமாக விண்ணை நோக்கி நெட்ட நெடுந் தோற்றத்திலே நீண்டு நிமிர்ந் திருக்கும். தென்னை மரத்தின் பகுதிகளுக்குள் இப்பகுதி தான் மிகவும் உயரத்தில் உள்ளதாகும். இந்த மிக மிக உயரமான பகுதியில்தான் அன்னங்கள் தங்கின என்று குறிக்கவே, தெங்கின் 'உயர்மடல்’ என்றார் ஆசிரியர். அஃ.தன்றி, ஒங்கிருந் தெங்கின் உயர் மடல் ‘அமர' என்று பாடா மல், உயர் மடல் 'ஏற’ என்று பாடியிருப்பதிலுள்ள நயத்தையும் நாம் சுவைக்கவேண்டும். ‘அமர' என்று சொல்லி விட்டால், உயரத்தின் எல்லையை வரையறுத்து முடித்த தாய்விடும். ஆனால் 'ஏற’ என்று சொல்லியிருப்பதின் வாயிலாக, அன்னங்கள் இன்னும் உயரத்தில் ஏறு முகத்திலேயே இருக்கின்றன-அதற்குமேல் இன்னும் உயரமான பொருள் ஏதேனும் இருக்குமானாலும் ஏறிப்போகும்-என உயரத்தின் ஏற்றத்திற்குக் கூர் சீவி விட்டிருக்கிறார் மாபெரும் புலவர் சாத்தனார். எத்தனை சொல் நயம்! எத்துணை பொருள் செறிவு !