உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

சிறு கதைப் பகுதி

20. தேடக் கிடைக்காத செல்வம்

இப்படி நேருமென்று சேதுநாதன் எதிர் பார்க்கவேயில்லை. அவர் வந்த விரைவு என்ன! இங்கே நடந்ததென்ன !

உண்மையிலேயே அவர் புது மாப்பிள்ளையாகப் பொலிந்தார். இடுப்பிலே உயர்ந்த சரிகைவேட்டி; உடம்பின் மேல் பளபளக்கும் பட்டுச் சட்டை; தோளிலே மடிப்புப் பட்டை அகலத்துக்கும் சரிகை கொண்ட விசிறிமடி; தலை யிலே நீண்ட நேரம் கண்ணாடியும் சீப்புமாய் ஏற்றி இறக்கி வளைத்து நெளித்து வாரி விட்ட வலம்புரிக் கிராப்பு; கழுத்திலே 'மைனர்’ சங்கிலி, கைவிரல்களிலே ஒன்பான் மணி பதித்த மோதிரங்கள்; நெஞ்சத்திலே நிலை கொள்ளாத மோகம்!

சேது நாதனின் எல்லா ஒப்பனைகளும் கலாவின் கண்ணுக்குத் திரையிடத்தான். இடையிலே திரையிடுவதால் மட்டும் எல்லாக் கண்களும் ஏமாந்து விடுமா? 'எக்ஸ்-ரே’ வைத்துப் பார்க்கும் கண்களும் இருக்கத்தானே செய்கின்றன!

கலா ஒரு கை படாத உரோசா. பல தலை முறைகளாகவே முள் இல்லாத உரோசா பரம்பரையில் வந்த அவள், இப்போது தனக்குத் தானே முள் முளைக்கச் செய்து கொண்டதோடு வேலியும் போட்டுக் கொண்டாள். கள்ளம் பொருந்திய உள்ளம் எதுவும் கை தீண்டிப் பறித்து விட முடியாது.