பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

199

அந்தப் புகைப் படத்தை உற்றுக் கவனித்த சேதுநாதன், திடீரெனக் கலாவின்மேல் பாய்ந்து, 'கண்ணே’ என்று கதறிக் கொண்டே அவளைக் கட்டியணைத்துக் கொண்டார்.

“என்னை விடுங்கள்! என் உடன்பாடு இல்லாமல் ஏன் என்னைத் தொட்டீர்கள்? இந்த அறையை விட்டு உடனே போய் விடுங்கள்"-என்று கடிந்தபடியே அவரது அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முயன்றாள் கலா.

"கண்ணே கலா! நான்தானம்மா உன் தந்தை. உன் அன்னையை ஏமாற்றிவிட்டு ஓடிப்போன அந்தக் கயவன் நான்தானம்மா! அதற்காகவும், இப்போது நான் உன்னிடம் நடந்து கொண்ட விலங்குச் செயலுக்காகவும் என்னைப் பொறுத்துக் கொள் அம்மா" என்று கெஞ்சியபடியே கலாவின் கால்களைக் கட்டிக் கொண்டார் சேதுநாதன்.

"என் அப்பாவா நீங்கள்! என்ன காரியம் செய்து விட்டீர்கள் அப்பா! நான் வேசித் தொழில் செய்திருப்பின், உங்கள் சொந்த மகளை அந்தத் தொழிலுக்கு அனுப்பியதாகத் தானே பொருள்படும். வேசி வீட்டிற்குச் சென்று பிள்ளை பெறும் ஆண்மக்கள் இதை உணர வேண்டாமா?

‘இனி ஒன்றும் சொல்லாதே கண்ணே! என்னால் தாங்க முடியாது. குழந்தை இல்லாத குறை இனி எனக்கு இல்லை. என் செல்வம் உனக்குத்தான். ஆனால் எனக்கோ நீதான் செல்வம். தேடக் கிடைக்காத செல்வம் - எப்படியோ கிடைத்துவிட்டாய்-என்று கூறி மகிழ்ச்சிக் கூத்தாடினார் தந்தை சேதுநாதன்.

அப்போது கலா சொரிந்த மகிழ்ச்சிக் கண்ணீரில் குளிர்ச்சி இருந்தது.