87
“கழைஅமல் சிலம்பின் வழை தலைவாட”-அகநா. 177 : 7
“கழைநரல் சிரம்பின் ஆங்கண் வழையொடு
வாழை ஓங்கிய தாழ்கண்அசும்பில்”-அகநா. 8 : 8
“வழைஅமல் வியன்காடு சிலம்பப் பிளிறும்”-பதிற். 41 : 13
“வழைவளர் சாரல் வருடை நன்மான்”-கலி. 50 : 21
“வறன் உறல் அறியாத வழை அமை நறுஞ்சாரல்”-கலி. 53 : 1
“வாழை ஓங்கிய வழைஅமை சிலம்பில்”-நற். 222 : 7
“கழைவளர் சிலம்பில் வழையொடு நீடி”-புறநா. 158 : 20
“ஒளிதிகழ் உத்தி உருகெழு நாகம்
அகருவழை ஞெமை ஆரம் இனைய”-பரி. 12 : 4-5
“கரையன சுரபுன்னை”-பரிபா. 11 : 17
இவ்வாறெல்லாம் சங்கவிலக்கியங்கள் கூறுதலின் மலைப் பகுதிக் காடுகளில் இம்மரம் ஓங்கி வளருமெனவும், கான்யாற்றுக் கரையிலும் காணப்படுமெனவும், சுரத்தில் வளரும் புன்னை போன்றதெனவும், நறிய மலரை உடையதெனவும் அறியலாம். மேலும், ஆய் அண்டிரன் என்பான் ‘வழை’ எனப்படும் சுரபுன்னை மலரைத் தனது முடிப்பூவாகச் சூடியிருந்தான் என்றும் தெரிய வரும்.
இம்மரம் மூங்கில், வாழை முதலியவற்றுடன் வளர்வதாகப் பேசப்படுகின்றது. வற்கடம் உறுதலை அறியாத வழை என்று இதனைக் கலித்தொகை குறிப்பிடுமாயினும் மூங்கில் நிறைந்த மலைப்பாதையில் வளரும் இம்மரமும் சற்று வாடிப் போகும் என்று கூறும் அகநானூறு 177 : 7.
‘கட்டிபெரே’ என்னும், இதனுடைய தாவரக் குடும்பத்தில் 45 பேரினங்களும், 900 சிற்றினங்களும் உலகில் உள்ளன என்றும், இவற்றுள் 6 பேரினங்களே இந்தியாவில் உள்ளன என்றும், தமிழ்நாட்டில் 5 பேரினங்களும், ஆக்ரோகார்ப்பஸ் என்ற இப்பேரினத்தில் ஒரு சிற்றினமாகிய லாஞ்சிபோலியஸ் மேற்குத் தொடர்ச்சி மலையில் வளர்கிறதென்றும் கூறுவர். சுரபுன்னை