143
கருவிளம் | : | நிரை நிரை |
கூவிளம் | : | நேர் நிரை |
கருவிளங்காய் | : | நிரை நிரை நேர் |
கூவிளங்காய் | : | நேர் நிரை நேர் |
கருவிளங்கனி | : | நிரை நிரை நிரை |
கூவிளங்கனி | : | நேர் நிரை நிரை |
கருவிளந்தண் பூ | : | நிரை நிரை நேர் நேர் |
கூவிளந்தண் பூ | : | நேர் நிரை நேர் நேர் |
கருவிளம்
சங்க இலக்கியத்தில் விளாமரமும், விளங்கனியும் பேசப்படுகின்றன. அன்றி, விளாமரம் வெள்ளில் என்றும் கூறப்படுகின்றது.
“பார்வை யாத்த பறைதாள் விளவின்
நீழல் முன்றில் நிலவுரல் பெய்து”-பெரும்பா. 95-96
இவ்வடிகட்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர், ‘பார்வை மான் கட்டி நின்று தேய்ந்த தாளினையுடைய விளவினது நிழலையுடைய முற்றத்திடத்துத் தோன்றிய நிலஉரலிலே அப்புல்லரிசியைச் சொரிந்து’ என்று உரை கூறுவார்.
“விளம்பழங் கமழும் கமஞ்சூழ் குழீஇ”-நற். 12 : 1
என்ற இதனால் தயிர்த் தாழியில் நறுமணம் கமழுதற்கு அதனுள் விளாம்பழத்தை வைத்து மணமேற்றுவர் என்று தெரிகிறது.
“வெள்ளில் குறுமுறிகிள்ளுபு தெறியா”-திருமு. 37
என்ற இதனால் விளவினது சிறிய தளிரைக் கிள்ளி அழகு பெற, ஒருவர் மேல் ஒருவர் தெறித்து மகிழ்வர் என்று அறியலாம்.
இவையன்றிக் கபிலர்குறிஞ்சிப் பாட்டில் விளவினது மலரைக் கூறவில்லை.
“மணிப்பூங் கருவிளை” (குறிஞ். 68) என்றவிடத்து நச்சினார்க்கினியர் ‘நீலமணிபோலும் பூக்களை உடைய கருவிளம்பூ’ என்று உரை கண்டார். ஈண்டு கருங்காக்கணம் எனப்படும் கருவிளையினது மலரே குறிப்பிடப்படுகின்றதல்லது கருவிளாவின் பூவன்று.