இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குருகிலை
அடலான்ஷியா மிசியோனிஸ் (Atelantia missionis,Oliv.)
“குருகிலை மருதம் விரிபூங்கோங்கம்” என்றார். கபிலர் (குறிஞ்: 73). ‘குருகிலை’ என்பதற்கு ‘முருக்கிலை’ என்று உரை கூறினார் நச்சினார்க்கினியர். சங்க நூல்களில் வேறுயாண்டும் இதனைப் பற்றிய செய்தி இல்லை. எனினும் குருகிலை, திணை மொழி ஐம்பது, கார் நாற்பது என்ற கீழ்க்கணக்கு நூல்களில்தான் பேசப்படுகிறது.
இவற்றால் இதனைப் பற்றி அறியக் கூடியவை :
- குருகிலை என்பது ஒரு மரத்தின் இலை போலும்
- இது முல்லை நிலத்தது .
- இது கார் காலத்தில் பூப்பது
- இவ்விலை மகளிர் முறுவல் போன்று வெண்ணிறமானது.
இதன் தாவரப் பெயர் அடலான்ஷியா மிசியோனிஸ் (Atalantia missionis) என்று கலைக்களஞ்சியம் குறிக்கிறது. இதன் தமிழ்ப் பெயர் ‘குருந்து’ என்று கூறுகின்றார் காம்பிள் (Vol: l: p. 114}. இவற்றைக் கொண்டு இதன் தாவரப் பெயரை வலியுறுத்த இயலவில்லை.