252
சங்க இலக்கியத்
“திருந்திழை அல்குற்குப் பெருந்தழை உதவிச்
செயலை முழுமுதல் ஒழிய ”-குறுந் 214 : 4-5
இனி. இம்மரம் இளவேனிற் காலத்தில் பூக்கும் என்று சிலப்பதிகாரம் செப்புகின்றது.
“மைந்தார் அசோகம் மட லவிழ் கொந்தார்
இளவேனில் வந்தது”[1]
இப்பிண்டியின் மலரைச் சுனையில் வளரும் நீலத்துடன் சேர்த்துப் பாடும் இரு பரிபாடல்கள் உள (15 : 30-31, 11 : 95-96). பிண்டியின் மலரைப் போன்று, இதன் தளிரும் நீல மலருடன் பிணைக்கப்படும் என்பர். ‘வையை ஆற்றில் மகளிர் நீராடினர். நீரோட்டத்தில் ஒப்பனைப் போட்டியும் நேர்ந்தது. ஒருத்தி நீல மலரைக் காதில் செருகிக் கொண்டு, மற்றொருத்தியின் முன்னே காட்சி தந்தாள். இவள், உடனே செயலையின் சிவந்த தளிரைத் தன் காதில் செருகி, எழில் காட்டினாள். செயலைத் தளிரின் செம்மை நிறம், நீல மலரில் எதிரொளித்து, அதன் நீல நிறத்தையும் பகலவன் நிறம் போலச் சிவப்பாக்கி விட்டதாம்’.
“சாய்குழைப் பிண்டித்தளிர் காதில் தையினாள்
பாய்குழை நீலம் பகலாகத் தையினாள்”
-பரிபா. 11 : 95-96
சமண சமயத்தில் அருக தேவனை, பூமலி அசோகின் புனை நிழலில் அமர்ந்தவன் என்பர். மேலும், காமதேவன் கொண்ட ஐம்மலர்க் கணைகளில் அசோக மலரும் ஒன்றாம். காமனால் எய்யப்பட்டால், கவர்ச்சி ஊட்டும் அசோகு துயர் செய்யும் என்றும், மகளிர் உதைத்தால் அசோகு மரம் மலரும் என்றும் கூறுவர்.
வேனிற்காலத்தில் மலர்ந்த இம்மர நிழலில், மலர்கள் உகுத்த தாதுப் பாயலில் பூக்கொய்யச் சென்ற மகளிர் தங்கியிருத்தலைக் கபிலர்,
“தாதுபடு தண்ணிழல் இருந்தனமாக”-குறிஞ். 106
என்று மிக அழகொழுகக் கூறுகின்றார். இம்மலரின் மணத்தாலும்,
- ↑ சிலப்: 8-வெண்பா