தாவரங்கள்
283
“காசின் அன்ன போதீன் கொன்றை
குருந்தோடு அலம்வரும் பெருந்தண் காலையும்
காரன்று என்றி யாயின்
கனவோ மற்றிது வினவுவல் யானே ”-குறுந் . 148 : 3-6
பருவம் அன்று எனக் கூறிய தோழியிடம் தலைவி வினவுகின்றாள்: “கிண்கிணிக் காசினை ஒத்த முகையீன்று கொன்றை மலர்ந்துள்ளது. கொன்றை குருந்த மரத்துடன் காற்றினால் சுழல்வதாயிற்று. மிக்க தண்மையுடன் கார்ப்பருவம் தொடங்கி விட்டது. இப்பருவத்தைக் காரன்று என்றியாயின், இங்ஙனமெல்லாந் தோன்றுவது கனவோ? நானேதான் கேட்கின்றேன் தோழி” என்று.
இதற்கும் மேலாக, நெஞ்சையள்ளும் குறுந்தொகைப் பாடலும் ஒன்றுண்டு. உண்மையில் கார்காலம் தொடங்கி விட்டது. தலைவன் வரவில்லை.
தோழிக்குக் கவற்சி பெரிதாயிற்று. இதனை ஓர்ந்து உணர்கின்றாள் தலைவி. தனது தமிழ்ப் பண்பு புலப்படக் கூறுவாளாயினள்.
“தோழி! இது காண்! அவர் பொய் கூற மாட்டார். ஆகலின், புதுப் பூங்கொன்றைக் கானம் காரெனக் கூறுமாயினும், யானோ தேறேன். இது பருவமன்று” என்றுரைப்பதாக ஓதலாந்தையார் மிகத் திறம்படப் பாடுகின்றார்.
“பொன்செய் புனைஇழை கட்டிய மகளிர்
கதுப்பில் தோன்றும் புதுப்பூங் கொன்றைக்
கானம் காரெனக் கூறினும்
யானோ தேறேன் அவர்பொய் வழங்கலரே”
-குறுந் , 21:2-5
இச்செய்யுளைப் பருவங் கண்டுழியும் அவர் பொய் கூறாரென்று தலைவி ஆற்றியிருந்ததற்கு மேற்கோளாகக் காட்டுவர் நச்சினார்க்கினியர் (தொல். அகத்: 14). மற்று, குறித்த பருவத்தில் தலைவன் வருவான் என்ற தோழி, தலைவிக்கு அறிவிப்பதுமுண்டு.
“வருவர் வாழி தோழி, புறவின்
பொன்வீக் கொன்றையோடு பிடவுத் தலையவிழ
இன்னிசை வானம் இரங்கும், அவர்
வருதும் என்ற பருவமோ இதுவே”-நற். 246 : 7- 10