தாவரங்கள்
429
கினியர், ‘செம்முல்லை’ என்று உரை கூறியுள்ளார். அவரே, பொருநராற்றுப் படையில் வரும் (199) ‘அவிழ் தளவின்’ என்றவிடத்து, தளவு என்பது முல்லை விசேடம் என்பராயினர். தளவ மலரைப் பிச்சிப்பூ என்று வழங்குவர் உலகியலார்.
மேலும், குறிஞ்சிப்பாட்டில், ‘வஞ்சி பித்திகம் சிந்து வாரம்’ (குறிஞ். 89) என்று குறிப்பிடப்படும் ‘பித்திகம்’ என்பதற்கு நச்சினார்க்கினியர், ‘பிச்சிப்பூ’ என்று உரை கண்டுள்ளார்.
“அவிழ் தளவின் அகன் தோன்றி
நகு முல்லை உகு தேறுவீ”-பொருந.199-200
என முடத்தாமக்கண்ணியாரும்,
“தளவின் பைங்கொடி தழீஇப் பையென
நிலவின் அன்ன நேர்அரும்பு பேணி
கார் நயந்து எய்தும் முல்லை”-ஐங். 454
எனப் பேயனாரும், தளவத்தையும், முல்லையையும் வேறுபடுத்தி உரைக்குமாப் போலக் கபிலரும் இவற்றைத் தனித் தனியாகப் பாடுவர். ஆதலின், தளவம் வேறு, முல்லை வேறு என்பதும், தளவம் முல்லையின் விசேடமாகச் செம்முல்லை எனப்படும் என்பதும் அறிதல் கூடும். தளவ மலரின் அகவிதழ்கள் அடிப்புறம் சிவந்து இருப்பதாலும், இதன் கொடியும், அரும்பும், மலரும், மணமும் முல்லையை ஒத்திருப்பதாலும் இது செம்முல்லை எனப்பட்டது போலும்.
‘தளவின் பசிய கொடியைத் தழுவி முல்லை படரும்’ (ஐங். 454) எனவும், ‘தவழ் கொடித் தளவம்’ (கலி. 102 : 2) எனவும் கூறுபவாதலின், தளவம் ஒரு படர் கொடி என்பதும் பெற்றோம்.
இக்கொடி புதர்களின் மேலேறிப் படரும் என்று பலருங் கூறுவர்.
“புதல்மிசைத் தளவின் இதல்முட் செந்நனை”
-அகநா. 23:3
“புதல் தளவின் பூச்சூடி”ーபுறநா. 395 : 5
“புதல்இவர் தளவம் பூங்கொடி அவிழ”-நற். 242 : 2
“. . . . . . . . புதல் மிசைப்
பூ அமல் தளவமொடு”-குறுந் 382 : 2-3