32
சங்க இலக்கியத்
என வரும் அடிகளுக்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் முறையே, ‘குளிர்ந்த குளத்திற் பூத்த செங்கழுநீர்ப்பூ’ எனவும், ‘பெரிய பலவாகிய செங்கழுநீரில் சுரும்புகளுக்கு அலர்கின்ற பலபூக்கள்’ எனவும் உரை கூறியுள்ளார். இவர் இங்ஙனம் உரை கூறுதற்குக் காரணம் என்ன எனின், கூறுதும்.
‘அரக்கிதழ்க் குவளையொடு’ என்று பெரும்பாணாற்றுப் படை (293) கூறுமாதலின், இதற்கு இவர் ‘சாதிலிங்கம் போன்ற இதழையுடைய குவளையோடு’ என்று உரை கண்டார். இதனால், குவளை என்பதைச் செங்குவளை எனக் கொள்வது போதரும். மேலும், நெய்தல் என்பதைக் கருங்குவளை எனப் பிரித்து இவர் உரை காண்பர். இதற்குக் காரணம் நெய்தலை ‘நீல நிற நெய்தல்’ ‘கரு நெய்தல்’ எனப் புலவர்கள் கூறுவதேயாம். கருங்குவளையை நீலமென்றும் காவியென்றும் கூறுப. இதன் விரிவை நெய்தலிற் காண்க.
“கழிய காவி குற்றும் கடல
வெண்டலைப் புணரியாடியும்”-குறுந். 144
“கழியே, சிறுகுரல் நெய்தலொடு காவி கூம்ப
எறி திரை ஓதம் தரல் ஆனாதே”-அகநா. 350:1-2
என்பவாதலின் உப்பங்கழியில் வாழும் நெய்தலுடன் ‘காவி’ என்ற மலரும் உண்டென்பதை அறியலாம். இதனைப் பிற்காலத்தில் கருங்குவளை என்றழைத்தனர் என்பர்.[1]
“அரிநீர் அவிழ்நீலம் அல்லி அனிச்சம்”-கலி. 91.1
நீலம் என்பது பிற்காலத்தில் கருங்குவளை மலருக்கு உரியதாயிற்று என்பர்.
குவளை என்பதைச் செங்கழுநீர் என்று புறநானூற்று உரைகாரரும் கூறுவர்.
“. . . . . . . . . . . . . . . . . . பெருங்துறை
நீர்தரு மகளிர் குற்ற குவளையும்”-புறநா. 42.16
என்பதற்குப் ‘பெரிய துறைக்கண் நீரை முகந்து கொள்ளும் பெண் பறித்த செங்கழுநீரும்’ என்று பொருள் கண்டார். “கழுநீர் என்பது நீண்டு நுனி கூர்மையான நீர்ப்பூ” என்பர். இது ஒக்கும்.
“தீநீர்ப் பெருங் குண்டுசுனை பூத்த குவளைக்
கூம்பவிழ் முழு நெறிபுரள் வரும் அல்குல்”
-புறநா. 116:1-2
- ↑ இலக்கியம் ஒரு பூக்காடு: 183