மௌவல்–மனை மல்லிகை
ஜாஸ்மினம் செசிபுளோரம்
(Jasminum sessiflorum,vahl.)
முல்லையின் குடும்பத்தைச் சேர்ந்த ‘மௌவல்’ என்பது ‘மல்லிகை’ வகையினதாகும். இதனை ‘வன மல்லிகை’ எனவும் ‘மனை மல்லிகை’ எனவும் வழங்குவர். இதன் இலைகள் தனி இலைகளாக இருத்தலின் இக்கொடி ‘முல்லை’யினின்று வேறுபடும்.
சங்க இலக்கியப் பெயர் | : | மௌவல் |
பிற்கால இலக்கியப் பெயர் | : | மல்லிகை விசேடம், வன மல்லிகை |
உலக வழக்குப் பெயர் | : | மனை மல்லிகை |
தாவரப் பெயர் | : | ஜாஸ்மினம் செசிபுளோரம் (Jasminum sessiflorum,vahl.) |
ஆங்கிலப் பெயர் | : | ஜாஸ்மின் (Jasmin) |
மௌவல்–(மனை மல்லிகை) இலக்கியம்
ஆசிரியர் நச்சினார்க்கினியர் ‘ஞாழல் மௌவல் நறுந்தண் கொகுடி’ (குறிஞ். 81) என்ற அடியில் வரும் மௌவல் என்பதற்கு மௌவற் பூ என்றாரேனும், சீவக சிந்தாமணியில்[1] இதனை மல்லிகை விசேடம் என்றார். நற்றிணை உரையாசிரியர் ‘மனை நடுமௌவலொடு’ (நற். 115) என்புழி, மௌவல் என்பதற்கு முல்லை என்று உரை கூறியுள்ளார். அங்ஙனமே குறுந்தொகை உரையாசிரியரும் ‘எல்லுறு மௌவல் நாறும்’ (குறுந். 19) என்றவிடத்து மௌவல் என்பதற்கு முல்லை என்று கூறியுள்ளார், குறிஞ்சிக் கபிலர் முல்லையையும் மௌவலையும் வேறு பிரித்தே பாடுவாராயினர். சேரமுனிவரும், ‘மாதவி மல்லிகை மௌவல் முல்லை’ என்று[2] ‘மல்லிகை’ ‘மௌவல்’ ‘முல்லை’,