524
சங்க இலக்கியத்
குறுகிய தாளையுடைய இக்கூதள மலரில் நறுமணம் உண்டு. இம்மணம் மாறாது நிலைத்து வீசும். இதனைக் குளவி மலரோடும், பிற மலர்களோடும் கலந்தும், கண்ணியாகப் புனைந்தும் தெய்வத்திற்குச் சூட்டுவதோடு, ஆடவரும் சூடிக் கொள்வர்.
“. . . . . . . நயவருஞ் சாரல்
கூதள நறும்பொழில் புலம்ப”-நற். 313 : 6-7
“குல்லை குளவி கூதளம் குவளை
இல்லமொடு மிடைந்த ஈர்ந்தண் கண்ணியன்”
-நற். 376 : 6-7
“. . . . . . . . . . . . குளவியொடு
வெண்கூ தாளந் தொடுத்த கண்ணியன்”-திருமுரு. 192
“குளவியொடு மிடைந்த கூதளங் கண்ணி
அசையா நாற்றம் அசைவளி பகர”-அகநா. 272 : 8-9
இம்மலரில் துளையொன்று இருக்கும். இதற்குத் ‘தூம்பு’ என்று பெயர். இப்பூ மலர்ந்த பின்னர், கொடியினின்று கழன்று விழுவதுண்டு. இவ்வியல்பினை நாகம் போத்தன் உவமிக்கும் திறம் போற்றுதற்குரியது.
தலைவன் கார் காலத்தில் மீண்டு வருவேனென்று கூறி, வினை வயிற் பிரிந்து சென்றான். கூறிச் சென்ற கார்ப் பருவம் கடந்து, கூதிர்ப் பருவம் வரவும், அது கண்டு தலைவி ஆற்றாள் என்று அஞ்சிய தோழி கூறுவதாக அமைந்தது இப்பாடல். ‘தோழி! கார் காலத்தை ஏற்றுக் கொண்ட தண்ணிய கொல்லையைக் காண்பாராயின், நீர் விளங்குகின்ற மலைப்பக்கத்தில் ஒரு படித்தாக மலர்ந்த, அழகிய வெண்கூதாள மலர்கள் காம்பிற் கழன்று உதிர்தலைப் போல நின் கைவளைகள் சோர்ந்து வீழ்வன அல்ல என்று எண்ணுவாரோ?’ என்று வினவுகின்றாள்.
“காரெதிர் தண்புனங் காணின் கைவளை
நீர்திகழ் சிலம்பின் ஓராங்கு அவிழ்ந்த
வெண்கூ தாளத்து அம்தூம்பு புதுமலர்
ஆர்கழல் புகுவ போலச்
சோர்குவ அல்ல என்பர்கொல் நமரே?”
-குறுந். 282 : 4-8