607
ஆகவே மிளகுக்குக் கறி, மிரியல் என்ற பெயர்களைச் சங்க நூல்கள் குறிப்பிடுகின்றன என்பது பெற்றாம்.
மிளகுக் கொடி மலைப்புறத்தில் வளரும் என்பதும், மலையில் ஓங்கி வளரும் சந்தன மரத்தில் மிளகுக் கொடி ஏறிப் படரும் என்பதும், பலா மரத்து நிழலில் படர்ந்து வளரும் என்பதும் சங்க நூல்களில் கூறப்படும்.
“கறிவளர் அடுக்கத்து இரவில் முழங்கிய”-குறுந். 90 : 2
“கறிவளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள்”-புறநா. 168 : 2
“கறிவளர் சிலம்பில் கடவுள் பேணி”-ஐங். 243 : 1
“கறிவளர் சாந்தம் ஏறல் செல்லாது”-அகநா. 2 : 6
“பைங்கறி நிவந்த பலவின் நீழல்”-சிறுபா. 43
மிளகுக் கொடியின் தளிரைக் குரங்குகள் கறிக்கும் என்பர் புலவர்கள்.
“கறிவளர் அடுக்கத்து ஆங்கண் முறிஅருந்து
குரங்கு ஒருங்கு இருக்கும் பெருங்கல்நாடன்”
-குறுந். 288 : 1-2
“அதிர்குரல் முதுகலை கறிமுறி முனைஇ
உயர்சிமை நெடுங்கோட்டு உகள”
(முறி-தளிர்)
-அகநா. 182 : 14-15
மலைகளில் வளரும் மிளகுக் கொடியில் விளைந்த மிளகின் பழமாகிய மிளகு (விதை) பாறைகளின் மேலே சிந்திக் கிடக்கும் என்றும், வையை ஆற்றிலே கறியும் சந்தனக் கட்டைகளும் மிதந்து வருமென்றும் புலவர்கள் கூறுவர்.
“பழுமிளகு உக்க பாறை நெடுஞ்சுனை”-குறிஞ். 187
“மைபடு சிலம்பின் கறியொடும் சாந்தொடும்”
-பரிபா. 16 : 2
சுருளி என்னும் சேரநாட்டுப் பேரியாற்றில் யவனரின் மரக்கலம் பொன் பொதிகளைக் கொடுதந்து கறிப் பொதிகளைக் கொடு செல்லும் என்றும், பூம்புகார் துறைமுகத்திலே ‘கடலிலே காற்றான் வந்த கரிய மிளகுப் பொதிகள்’ வந்து குவிந்தன என்றும், தமிழ் நாட்டு மிளகு வாணிபம் பேசப்படுகின்றது.