பக்கம்:சொன்னால் நம்ப மாட்டீர்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சின்ன அண்ணாமலை

27


அவருக்கு மெத்தமகிழ்ச்சி. ஆகவே அடிக்கடி நான் அவர் இல்லத்திற்குச் செல்வேன்.

அன்று நான் சென்றபோது அவர் மேஜைமீது ஆனந்தவிகடன் பத்திரிகை இருந்தது. அதன் மேலட்டை மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது. படங்கள் நிறைய இருந்தன. உள்ளே பிரித்துப் படித்தேன். வேடிக்கை வேடிக்கையாக துணுக்குகளும் கதைகளும் இருந்தன.

அதில் கொட்டை எழுத்தில் முதலில் இரண்டு பக்கம், “பொருளாதாரம், பணம், செல்வம் என்றெல்லாம் விவரித்து எழுதி சின்னஞ் சிறுகதை மூலமும், துணுக்குகள் மூலமும் விளக்கப்பட்டிருந்தன. சிறுவனாகிய எனக்கே மிகத் தெளிவாக விளங்கியது நான் பேச வேண்டிய விஷயமும் அதுதான். அதனால் நான் பரபரப்படைந்திருந்தேன்.

வழக்கம் போல ஹரிஜன ரெங்கண்ணா வெளியே வந்தார். நான் வணக்கம் செலுத்திவிட்டு, சார் இது...” என்று இழுத்தேன். வேண்டுமா எடுத்துக் கொண்டு போ, ‘கல்கி’ ன்னு ஒருத்தன் இதிலே அருமையா எழுதுகிறான். அவன் எழுதுறதை விடாம படி சமத்தாயிடுவே” என்று சொன்னார்.

ஒரே ஓட்டம். ‘ஆனந்த விகடன்’ இதழில் எழுதியிருந்த தலையங்கத்தைப் படித்து நன்றாக மனப்பாடம் செய்து கொண்டேன்.

அந்த வாரம் மாணவர் கூட்டம் ஆரம்பமாயிற்று உள்ளுர் வக்கீல் திரு. ராமசாமி அய்யங்கார், அவர்கள் தலைமை வகித்தார். அவர் செல்வம் என்பது பற்றிச் சிறிது நேரம் பேசினார். வேறு சில மாணவர்களும் பேசினார்கள். கடைசியாக என் முறை வந்தது.