பக்கம்:திருக்குறள், இனிய எளிய உரை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இடன் அறிதல்

129


7.அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்.

செய்ய வேண்டிய செயல் வகைகளையெல்லாம் சிறிதும் சூறையில்லாமல் சிந்தித்து ஏற்ற இடத்தையும் அறிந்து, ஒரு செயலைச் செய்யத் தொடங்கினால், அந்த முயற்சி கைகூடுதற்கு அஞ்சாமை தவிர வேறு துணையே வேண்டியதில்லை.

தக்க இடத்தோடு, அஞ்சாமையும் வேண்டும் என்பது கருத்து. 497

8.சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும்.

சிறிய சேனையை உடையவனாக இருந்தாலும், அவன் தனக்குப் பொருந்திய இடத்தை அடைந்திருப்பானானால், பெரிய சேனையை உடையவனும், அவனை எதிர்க்க முடியாமல் முயற்சி குன்றி அழிவான். 498

9.சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது.

காவற் கோட்டையும், அதற்கேற்ற பிற சிறப்புக்களும் இல்லாதவராய் இருந்தாலும், பகைவர் நிலையாகத் தங்கியிருக்கும் இடத்துக்குச் சென்று, அவர்களைத் தாக்குதல் அரிது. 499

10.காலாழ் களரின் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.

வேல் ஏந்திய வீரரைத் தன் கொம்பினால் குத்திக் கோத்து எடுக்கும் அஞ்சாத தன்மையுடைய பெரிய யானையையும், அது கால் ஆழும்படியான சேற்று நிலத்தில் அகப்பட்டுக் கொண்ட போது, ஒரு சிறு நரி அதைக் கொன்று விடும்.

களர்-உவர் நிலம்; அடும் . கொன்று விடும்; கண் அஞ்சா-பயப்படாத, வேல் ஆள்-வேல் ஏந்திய வீரர்; முகத்த-முகத்தினையுடைய, இங்கே முகத்தில் உள்ள கொம்பினைக் குறிக்கும்; களிறு . ஆண் யானை. 500