பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருச்சதகம் * 111


கருப்பு மட்டு-கருப்பஞ்சாறு.

‘ஐயனே! நின் திருவடிப் பேறு எனக்குக் கிடைத்தது, அந்த நேரத்தில் கருப்பஞ் சாறுபோல இனிமையுடையதாய் இருந்தது. என் நெஞ்சம் பண்புடையதாக இருந்திருப்பின் அப்பொழுதே அதில் கரைந்திருக்க வேண்டும். அத் திருவடிகள் என்னை விட்டு நீங்கவும் அதனால் ஒரு சிறிதும் கலக்கமுறாமல் யான் இருக்கின்றேன் என்றால், வஞ்சகனாகிய என் நெஞ்சம் இரும்பால் ஆகியது’ என்பது தெளிவு.

‘நீ பிரிந்த பிறகும் இப்பரந்த உலகிடை நெருப்பும் இருந்துகொண்டுதான் இருக்கின்றது, நானும் இருந்து கொண்டுதான் இருக்கிறேன்; அதில் வீழ்ந்து மடியவில்லை. இப்படிப்பட்ட யான் உன்னை அடைய வேண்டுமென்ற விருப்பமுடையேன் என்று கூறிக்கொள்வது விந்தையாக இல்லையா?' என்கிறார்.

‘என்ன விச்சையே’ என்ற சொற்களை 'என் அவிச்சையே' என்று பிரித்து, என்னுடைய அஞ்ஞானம் (அவிச்சை) காரணமாகவே தீயில் விழுந்து இறவாமல் இருக்கின்றேன் என்றும் பொருள் கொள்ளலாம்.

ஆனந்த பரவசம்


85.

விச்சுக் கேடு பொய்க்கு ஆகாது
       என்று இங்கு எனை வைத்தாய்
இச்சைக்கு ஆனார் எல்லாரும்
       வந்து உன் தாள்சேர்ந்தார்
அச்சத்தாலே ஆழ்ந்திடுகின்றேன்
       ஆரூர் எம்
பிச்சைத் தேவா என் நான்
      செய்கேன் பேசாயே 81

விச்சுக்கேடு-விதையினழிவு. இச்சைக் கானார்- கருணைக் கிலக்கானார்.