பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128 * திருவாசகம் - சில சிந்தனைகள் - 2


முந்தைய பாட்டில் கூறிய பழமொழி நினைவு வந்தவுடன் இறைவனுக்கு எச்சரிக்கை விடுவதுபோன்ற அக்கருத்தைச் சொல்லியிருக்கக் கூடாதோ என்று நினைக்கின்றார் அடிகளார். அவன் பெருமை எங்கே, யாரினும் கடையனான தம் நிலைமை எங்கே என்ற நினைவு வந்தவுடன் போற்றி போற்றி என்று கூறிச் சரணாகதி அடைகிறார்.

102.

அப்பனே எனக்கு அமுதனே
    ஆனந்தனே அகம் நெக அள்ளூறு தேன்
ஒப்பனே உனக்கு உரிய அன்பரில்
     உரியனாய் உனைப் பருக நின்றது ஓர்
துப்பனே சுடர் முடியனே துணையாளனே
     தொழும்பாளர் எய்ப்பினில்
வைப்பனே எனை வைப்பதோ சொலாய்
      நைய வையகத்து எங்கள் மன்னனே 98

துப்பன்-உணவாயுள்ளவன். தொழும்பாளர்-அடியார். எய்ப்பினில் வைப்பு-இளைத்த காலத்தில் உதவும் சேமநிதி.

இப்பாடலிலும் இறைவன் பெருமைகளைப் புகழ்ந்து கூறிவிட்டு, 'இத்துணைப் பெருமை உடையவனாகிய நீ எண்ண மனம் நையுமாறு இவ்வுலகிடை விட்டுச் சென்றது முறையோ' என்று அரற்றுகின்றார்.

103.

மன்ன எம்பிரான் வருக என் எனை
     மாலும் நான் முகத்து ஒருவன் யாரினும்
முன்ன எம்பிரான் வருக என் எனை
      முழுதும் யாவையும் இறுதி உற்ற நாள்
பின்ன எம்பிரான் வருக என் எனைப்
      பெய்கழற்கண் அன்பாய் என் நாவினால்
பன்ன எம்பிரான் வருக என் எனைப்
       பாவநாச நின் சீர்கள் பாடவே 99