பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை * 203


'தோழிகளே! நாம் அனைவரும் ஈசனுக்கு அன்பர்கள் என்பதை நான் உணர்கின்றேன். நம்மால் வழிபடப்படும் ஈசன் எத்தகையவன் என்பதை அறியாதவள் அல்லள் நான். அவனுடைய பாதங்களை எளிதாக நாம் பற்றிக்கொண்டதால் அவனுடைய சிறப்புக்களையும், பெருமைகளையும் நாம் மறந்துவிடவில்லை. அத்திருவடிகள் விண்ணோர்களும் ஏத்துதற்கு எளிதில் கிடைக்காத திருவடிகளாம். என்ன அதிசயம்! அத்தகைய திருவடிகள் நம்மைப்போன்ற சாதாரணப் பெண்களும் வழுத்துதற்கு எளிதாய் இதோ நம் முன்னர் உள்ளன. இது எவ்வாறு முடிந்தது? விண்ணோர்களுக்கே கிடைக்காத ஒன்று. நமக்குக் கிடைத்துவிட்டது என்பதை நினைத்துப் பார்த்தேன்; உண்மை விளங்கிவிட்டது. நம் தகுதி நோக்கி இத் திருவடிகள் கிட்டவில்லை. அன்பில் ஏழைகளாகிய நம்மாட்டுக் கொண்ட பரம கருணையால் அத்திருவடிகளை நமக்குத் தந்து அருள, தேஜோமயமான அவ்விறைவன் நம்மாட்டு வந்தருளினன்’ என்கிறாள். அருள என்ற சொல் ஒரே தொடரில் 'தந்தருள வந்தருளும்' என இருமுறை பயன்படுத்தப்பெற்றதன் நோக்கம் இதுவேயாகும்.

‘அருள்செய்ய வேண்டும் என்று கருதியவன், நாம் அவனிடம் செல்லமுடியாது என்பதை அறிந்து கொண்டான்; எனவே வந்தருளினான். அத்திருவடிகளைப் பெறுவதற்குரிய எவ்விதத் தகுதியும், உரிமையும் நம்மாட்டு இல்லை என்பதைப் புரிந்துகொண்ட அவன், கருணை காரணமாக நாம் இருக்குமிடம் தேடிவந்து தந்து அருளினான்’ என்றும் கூறினாள்.

‘ஏத்துதற்குக் கூசும் மலர்ப்பாதம்' என்ற தொடரில் ‘கூசும்’ என்ற சொல் இடைநிலைத் தீவகமாக அமைந்து உள்ளது. தேவர்கள் தம் தகுதியின்மையை அறிந்த காரணத்தால் அத்திருவடிகளை ஏத்தக் கூசுகிறார்கள்.