பக்கம்:திருவாசகம் சில சிந்தனைகள்-2.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவெம்பாவை • 231


கழலைப் பாடும் இந்தப் பணி, அவர்கள் நீராடும் பொழுதுதான் நடைபெறுகிறது போலும் என்று கருத வேண்டா. 'கழல்பாடி' என்ற தொடரை அடுத்துவரும் 'வாழ்ந்தோம் காண்’ என்பதனோடு சேர்த்தல் வேண்டும். பாடி என்ற வினையெச்சம் வாழ்ந்தோம் என்ற வினைகொண்டு முடிகிறது. வாழ்தலாகிய இக்காரியம் நடைபெற, பாடுதலாகிய காரணம் உதவிற்று என்க. வாழ்ந்தோம் என்ற சொல்லுக்கு உடல் அளவில் வாழ்கின்றோம் என்று பொருள் கூறல் சரியன்று. மேலும் மேலும் ஆன்ம வளர்ச்சியடைகின்ற தன்மையையே வாழ்வு என்ற சொல் குறிப்பிடுகின்றது.

நின் கழல்பாடி வாழ்ந்தோம் என்று கூறுவதால் உன் திருவடிகளைப் பாடப்பாட எங்கள் வாழ்வு மேலும் மேலும் வளர்ச்சி அடைகின்றது என்பதே இதன் உண்மைப் பொருளாகும். பாடி என்ற இறந்தகால வினையெச்சத்திற்கு ஏற்ப, வாழ்ந்தோம் என்ற இறந்த கால வினைமுற்று வந்ததேனும், பாட வாழ்கின்றோம் என்பதே இதன் பொருளாகும்.

‘ஐயா நீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்’ என்ற தொடர் பல்வேறு வகையாகப் பொருள்கொள்ள இடந்தந்து நிற்கின்றது. சைவ சித்தாந்த அடிப்படையில் பலரும் இதற்குப் பொருள் கூறியுள்ளனர். இத்தொடருக்கு வேறு வகையாகப் பொருள்காண்டலும் கூடும் எனத் தோன்றுகிறது.

படைத்தல், காத்தல் முதலிய ஐந்தொழில்களையும் இறைவன் விளையாட்டாகச் செய்கிறான் என்பதைத் தமிழர் தொன்றுதொட்டே கூறிவந்தனர். சைவர்கள்மட்டுமல்லாமல் வைணவர்களும் இக்கருத்தைக் கூறியுள்ளனர் என்பதை 'அலகிலா விளையாட்டு உடையார்’ என்ற கம்பன் பாடல் அறிவுறுத்தும்.