86
உரிமைப் பெண்
ஒரு ஏக்கம் குடி புகலாயிற்று. திடீரென்று ஒரு நாள் அவள் தனியாக வந்தாள். ஆவலோடு அவளிடம் பேசினேன். “உன் அண்ணன் எங்கே?” என்று விசாரித்தேன். அவன் காலராக் கண்டு இறந்து விட்டதாகச் சொன்னாள். அவள் கண்களிலே நீர் ததும்பிற்று.
சில நாட்களில் மறுபடியும் அவள் மறைந்து விட்டாள். எங்கு போனாளோ என்ன நிலைமையில் இருக்கிறாளோ ஒன்றும் தெரிந்துகொள்ள முடியவில்லை. அவளுடைய இனிய குரல் மட்டும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.
மேலும் ஒரு மூன்று வருஷங்கள் இப்படி நழுவி விட்டன. இன்று திடீரென்று எதிர்பாராத வகையில் அவள் பாட்டைக் கேட்கவே எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. அதனால்தான் அவளருகே செல்ல நான் எல்லோரையும் தள்ளிக் கொண்டு சென்றேன். என் குரலை அவள் அறிந்து கொண்டாள்.
“ஆமாம், நீங்க ராதா, ராதா என்று கூப்பிடுவீர்களே அந்த ராதா நான் தான்” என்று கலக்கத்தோடு கூறினாள்.
அவளுடைய அழகான கண்களிலே இப்பொழுது ஒளியில்லை. அதே முகம்-இல்லை, இப்பொழுது அந்த முகத்தில் ஜீவகலையே இல்லை. அது வெறும் பொம்மையின் முகம்போல உணர்ச்சியற்றுக் காணப்பட்டது. என் உள்ளத்திலே பலவகையான எண்ணங்கள் எழுந்து குமுறின.
“ராதா, உன் கண்கள் ஏன் இப்படியாய் விட்டன?” என்று குழறிக் குழறிக் கேட்டேன்.
அவள் பதில் பேசாமல் என்னவோ யோசித்துக் கொண்டிருந்தாள். ஒளியிழந்த கண்களிலிருந்து முத்துப்