ஜமதக்னி 83
“இப்போது என்னத்தைப்பத்தி யோசனை பண்ணறேள்? உங்கள் பாஷையில் இந்த விளக்கில் என்னத்தைப் பார்க்கறேள்?”
அவன் சிரிக்காமல், தவமேறிய முகத்துடன் சுடரைப் பார்த்துக்கொண்டு, “நீ எதற்காக அழுதாய் என்பதைப் பார்க்கப் பார்க்கிறேன்” என்றான்.
என்ன பார்க்கிறேள்?
மாலையிருள் பந்துபந்தாய்த் திரள ஆரம்பித்து விட்டது. விளக்குச் சுடர் மூச்சு விட்டுக்கொண்டு பெரிதானாற் போலிருந்தது. மற்ற விளக்குகளை ஏற்ற எழுந்திருக்க மாஞ்சிக்கு அச்சமயம் மனமில்லை. குத்து விளக்கின் சுடர் ஒளி அவளைக் கவ்விற்று. அவன் குரல் கனம் கூடத்தில் தழைந்து நிறைந்தது.
“என் எதிரில் இப்பொழுது ஒரு கலியாணம் நடந்து கொண்டிருக்கிறது.”
“யாருடைய கல்யாணம்?”
“யாருடையது உனக்கு வேண்டும்?”
“நீனாவா?”
“சரி. இதோ நீனா வருகிறாள், கொசுவம் வைத்துக் கட்டிக்கொண்டிருப்பது உண்மையில் அவளுக்கு ரொம்பவும் பாந்தமாயிருக்கிறது. கோவில் அம்பாளுக்கு அலங்காரம் பண்ணினாற் போலேயே இருக்கிறது. மாப்பிள்ளைக்குப் பஞ்சக்கச்சம் அவ்வளவு ஏர்வையாயில்லை. இருவரும் வந்து உன்னிடம் தேங்காயைக் கொடுத்து நமஸ்காரம் பண்ணுகிறார்கள்—”
மாஞ்சி பெருமூச் செறிந்தாள். “குழந்தை எங்கே இருக்கிறாளோ, என்ன பண்றாளோ, இருக்காளோ, இல்லையோ? வளர்த்து தத்தம்னா தத்தமே பண்ணிப்பிட்டோம்!”