கொங்கண நாயனார்
கொங்கண நாயனார் பாடல்கள்
வாலைக் கும்மி
- பக்கம் 238 - 251
1 காப்பு[தொகு]
- கல்விநிறை வாலைப்பெண் காதலியென் றோதுகின்ற
- செல்வியின் மேற் கும்மிதனைச் செப்புதற்கே - நல்லிசைய
- நாதனின்சொல் வேதனஞ்சு போதன்மிஞ்சி மானகஞ்ச
- பாதம்வஞ்ச நெஞ்சில்வைப் போம்
2 கும்மி[தொகு]
சத்தி சடாதரி வாலைப்பெண் ணாமந்ந
- உத்தமி மேற் கும்மிப் பாட்டுரைக்க
வித்தைக் குதவிய வொற்றைக்கொம் பாம் வாலை
- சித்தி விநாயகன் காப்பாமே
3 சரஸ்வதி துதி[தொகு]
சித்தர்கள் போற்றிய வாலைப் பெண் ணாமந்த
- சத்தியின் மேற்கும்மிப் பாட்டுரைக்கத்
தத்தமி தோமென ஆடுஞ் சரஸ்வதி
- பத்தினி பொற்பதங் காப்பாயே
4 சிவபெருமான் துதி[தொகு]
எங்கும் நிறைந்தவள் வாலைப்பெண் ணாம்மாலின்
- தங்கையின் மேற்கும்மி பாடுதற்குக்
கங்கை யணிசிவ சம்புவாஞ் சற்குரு
- பங்கயப் பொற்பாதங் காப்பாமே
5 சுப்பிரமணியர் துதி[தொகு]
ஞானப்பெண் ணாமருள் சோதிப்பெண் ணாமாதி
- வாலைப்பெண் மேற்கும்மி பாடுதற்கு
மானை பெண்ணாக்கிய வள்ளிக் கிசைந்திடும்
- மால்முரு கேசனுங் காப்பாமே
6 விஷ்னு துதி[தொகு]
ஆண்டிப்பெண் ணாம்ராச பாண்டிப்பெண் ணாம் வாலை
- அம்பிகை மேற்கும்மி பாடுதற்குக்
காண்டீப னால் பணி பூண்டவன் வைகுந்தம்
- ஆண்டவன் பொற்பதங் காப்பாமே
7 நந்தீசர் துதி[தொகு]
அந்தரி சுந்தரி வாலைப் பெண் ணாமந்த
- அம்பிகை மேற்கும்மி பாடுதற்குச்
சிந்தையில் முந்திநல் விந்தையாய் வந்திடும்
- நந்தீசர் பொற்பதங் காப்பாமே
8 நூல்[தொகு]
தில்லையில் முல்லையி லெல்லையு ளாடிய
- வல்லவள் வாலைப் பெண்மீ தினிலே
சல்லாபக் கும்மித் தமிழ்பா டவரும்
- தொல்லை வினை போக்கும் வாலைப் பெண்ணே
9[தொகு]
மாதா பிதாகூட இல்லாம லே வெளி
- மண்ணும் விண்ணுமுண்டு பண்ணவென்று
பேதைப்பெண் ணாமுதல் வாலைப் பெண் ணாளென்று
- புகுந்தா ளிந்தப் புவியடக்கம்
10[தொகு]
வேதமும் பூதமுண் டானது வும்வழி
- விஞ்ஞான சாத்திர மான துவும்
நாதமுங் கீதமுண் டானது வும்வழி
- நான் சொல்லக் கேளடி வாலைப்பெண்ணே
11[தொகு]
முந்தச் செகங்களுண் டானது வும்முதல்
- தெய்வமுந் தேவருண் டானதுவும்
விந்தையாய் வாலையுண் டானது வும் ஞான
- விளக்கம் பாரடி வாலைப்பெண்ணே
12[தொகு]
அரிக்கு முந்தின தவ்வெழுத்தாம் பின்னும்
- அரிக்குள் நின்றதும் அஞ்செழுத்தாம்
தரிக்கும் முந்தின தஞ்செழுத்தாம் வாசி
- பரிக்குள் நின்றது மஞ்செழுத்தாம்
13[தொகு]
ஆதியிலைந்தெழுத் தாயினாள் வாலைப்பெண்
- ஐந்தெழுத்து மென்று பேரானாள்
நாதியி னூமை யெழுத்திவள் தானல்ல
- ஞான வகையிவள் தானானாள்
14[தொகு]
ஊமையெழுத்தே யுடலாச்சு மற்றும்
- ஓமென் றெழுத்தே யுயிராச்சு
ஆமிந் தெழுத்தை யறிந்து கொண்டு விளை
- யாடிக் கும்மி யடியுங்கடி
15[தொகு]
செகம் படைத்ததும் அஞ்செழுத்தாம் பின்னும்
- சீவன் படைத்ததும் அஞ்செழுத்தாம்
உக முடிந்தது மஞ்செழுத்தாம் பின்னும்
- உற்பன மானது மஞ்செழுத்தாம்
16[தொகு]
சாத்திரம் பார்த்தாலு தானுமென்ன வேதந்
- தானுமே பார்த்திருந் தாலுமென்ன
சூத்திரம் பார்த்தல்லோ ஆளவேணு மஞ்சு
- சொல்லை யறிந்தல்லோ காண வேணும்
17[தொகு]
காணாது கிட்டாதே எட்டாதே அஞ்சில்
- காரிய மில்லையென்றே நினைத்தால்
காணாதுங் காணலா மஞ்செழுத் தாலதில்
- காரியமுண்டு தியானஞ் செய்தால்
18[தொகு]
ஆயனு மைந்தா யெழுத்துக்குள் ளேயறி
- வாயனு மைந்தா மெழுத்துக்குள்ளே
வாயனு மைந்தா மெழுத்துக்குள் ளேயிந்த
- வாலையு மைந்தா மெழுத்துக்குள்ளே
19[தொகு]
அஞ்செழுத்தான தும் எட்டெழுத் தாம்பின்னும்
- ஐம்பத்தோர் அட்சரந் தானாச்சு
நெஞ்செழுத் தாலே நினையா மலந்த
- நிசந்தெ ரியுமோ வாலைப்பெண்ணே
20[தொகு]
ஏய்க்கு தேய்க்கு தஞ்செழுத் துவதை
- எட்டிப் பிடித்துக் கொளிரண்டெழுத்தை
நோக்கிக்கொள் வாசியை மேலாக வாசி
- நிலையைப் பாரடி வாலைப்பெண்ணே
21[தொகு]
சிதம்பர சக்கரந் தான்றி வாரிந்தச்
- சீமையிலுள்ள பெரியோர்கள்
சிதம்பர சக்கரமென்றால் அதற்குள்ளே
- தெய்வத்தை யல்லோ அறியவேணும்
22[தொகு]
மனமு மதியு மில்லாவி டில்வழி
- மாறுதல் சொல்லியே யென்ன செய்வாள்
மனமு றுதியும் வைக்கவே ணும் பின்னும்
- வாலை கிருபையுண் டாகவேணும்
23[தொகு]
இனிவெ ளியினிற் சொல்லா தேயெழில்
- தீமட்டு திந்த வரி விழிக்கே
கனிமொ ழிச்சியீர் வாருங்கடி கொஞ்சங்
- கருவைச் சொல்லுவேன் கேளுங்கடி
24[தொகு]
ஊத்தைச் சடலமென் றெண்ணா தேயிதை
- உப்பிட்ட பாண்டமென் றெண்ணாதே
பார்த்த பேருக்கே ஊத்தையில் லையிதைப்
- பார்த்துக்கொள் உன்ற னுடலுக்குள்ளே
25[தொகு]
உச்சிக்கு நேராயுண் ணாவுக்கு மேல் நிதம்
- வைத்த விளக்கும் எரியுதடி
அச்சுள்ள விளக்கு வாலைய டிஅவி
- யாம லெரியுது வாலைப்பெண்ணே
26[தொகு]
எரியுதே அறு வீட்டினி லேயதில்
- எண்ணெயில் லையமிழ் தண்ணீரில்லை
தெரியுது போக வழியுமில் லைபாதை
- சிக்குது சிக்குது வாலைப்பெண்ணே
27[தொகு]
சிலம்பொ லியென்னக் கேட்கும டிகெத்த
- சிக்குள்ள பாதை துடுக்கமடி
வலம்புரி யச் சங்கமூது மடிமேலே
- வாசியைப் பாரடி வாலைப்பெண்ணே
28[தொகு]
வாசிப் பழக்கம் அறியவேணும் மற்றும்
- மண்டல வீடுகள் கட்டவேணும்
நாசி வழிக் கொண்டு யோகமும் வாசியும்
- நாட்டத்தைப் பாரடி வாலைப் பெண்ணே
29[தொகு]
முச்சுடரான விளக்கினுள்ளே மூல
- மண்டல வாசி வழக்கத்திலே
எச்சுடராகி யந்தச் சுடர்வாலை
- இவள் விட வேறில்லை வாலைப்பெண்ணே
30[தொகு]
சூடாமல் வாலையிருக்கிறதும் பரி
- சித்த சிவனுக்குள் ளானதனால்
ஈடாமல் வாசிப் பழக்கத்தைப் பாருநாம்
- மேல்வீடு காணலாம் வாலைப்பெண்ணே
31[தொகு]
மேல்வீடு கண்டவன் பாணியடி விண்ணில்
- விளக்கில் நின்றவன் வாணியடி
தாய்வீடு கண்டவன் ஞானியடி பரி
- தாண்டிக் கொண்டான் பட்டாணியடி
32[தொகு]
அத்தியி லேகரம் பத்தியிலே மனம்
- புத்தியிலே நடு மத்தியிலே
நெற்றி சதாசிவம் என்று சொன்னேன் உன்றன்
- நிலைமையைப் பாரடி வாலைப்பெண்ணே
33[தொகு]
அழுத்திலே சொல்லஞ் செழுத்திலே நானும்
- வழுத்தி னேன் ஞானப் பழத்திலே
கழுத்திலே மயேஸ்வரனும் உண்டுகண்
- கண்டு பாரடி வாலைப்பெண்ணே
34[தொகு]
aஞ்சிலே பிஞ்சிலே வஞ்சியரே நிதம்
- கொஞ்சி விளையாடும் வஞ்சியரே
நெஞ்சிலே ருத்திரன் சூழிருப் பானவன்
- நேருடனா மடி வாலைப்பெண்ணே
35[தொகு]
தொந்தியிலே நடுப் பந்தியிலே திடச்
- சிந்தையிலே முந்தி யுன்றனுடன்
உந்தியில் விண்ணுவுந் தாமிருப் பாரிதை
- உண்மையாய்ப் பாரடி வாலைப்பெண்ணே
36[தொகு]
ஆலத்திலே இந்த ஞாலத்திலே வருங்
- காலத்திலே அனு கூலத்திலே
மூலத்திலே ப்ரமன் தானிருந்து வாசி
- முடுக்கிறான் பிண்டம் பிடிக்கிறானே
37[தொகு]
தேருமுண்டு அஞ்நூறாம் ஆணியுண்டே அதில்
- தேவரும் உண்டு சங்கீதம் உண்டே
ஆருண்டு பாரடி வாலைத் தெய்வம் அதில்
- அடக்கந் தானடி வாலைப்பெண்ணே
38[தொகு]
ஒன்பது வாயில் கொள் கோட்டையுண்டே அதில்
- உள்ளே நிலைக்காரர் அஞ்சு பேராம்
அன்புடனே பரிகாரர்கள் ஆறுபேர்
- அடக்கந் தானடி வாலைப்பெண்ணே
39[தொகு]
இந்த விதத்திலே தேகத்திலே தெய்வம்
- இருக்கையில் புத்திக்கு அறிக்கையினால்
சந்தோட வாலையைப் பாராமல் மனிதர்
- சாகிற தேதடி வாலைப்பெண்ணே
40[தொகு]
நகார திட்டிப்பே ஆனதனால் வீடு
- வான வகார நயமாச்சு
உகார மூச்சி சிரசாச்சே இதை
- உற்றுப் பாரடி வாலைப்பெண்ணே
41[தொகு]
வகார மானதே ஓசையாச்சே அந்த
- மகார மானது கர்ப்பமாச்சே
சிகார மானது மாய்கையாச்சே இதைத்
- தெளிந்து பாரடி வாலைப்பெண்ணே
42[தொகு]
ஓமென்ற அட்சரந் தானுமுண்டு அதற்குள்
- ஊமை யெழுத்தும் இருக்குதடி
நாமிந்தெழுத்தை யறிந்து கொண்டே நாம் வினை
- நாடிப் பாரடி வாலைப்பெண்ணே
43[தொகு]
கட்டாத காளையைக் கட்டவேணும் ஆசை
- வெட்ட வேணும்வாசி யொட்டவேணும்
எட்டாத கொம்பை வளைக்க வேணுங்காயம்
- என்றைக்கு இருக்குமோ வாலைப்பெண்ணே
44[தொகு]
இருந்த மார்க்கமாய்த் தானிருந்து வாசி
- ஏற்காமலே தான் அடக்கவேணும்
திரிந்தே ஓடி யலைந்து வெந்து தேகம்
- இறந்து போச்சுதே வாலைப்பெண்ணே
45[தொகு]
பூத்த மலராலே பிஞ்சுமுண்டே அதில்
- பூவில்லாப் பிஞ்சும் அனேகமுண்டு
மூத்த மகனாலே வாழ்வுமுண்டு மற்ற
- மூன்று பேராலே அழிவுமுண்டு
46[தொகு]
கற்புள்ள மாதர் குலம் வாழ்க நின்ற
- கற்பை யளித்தவரே வாழ்க
சிற்பரனைப் போற்றிக் கும்மியடி
- தற்பரனைப் போற்றிக் கும்மியடி
47[தொகு]
அஞ்சி னில்ரெண்டழிந்ததில்லை யஞ்
- சாறிலே யும்நாலொழிந்த தில்லை
பிஞ்சிலே பூவிலே துஞ்சுவதாம் அது
- பேணிப் போடலாம் வாலைப்பெண்ணே
48[தொகு]
கையில்லாக் குட்டையன் கட்டிக்கிட்டான் இரு
- காலில்லா நெட்டையன் முட்டிக் கிட்டான்
ஈயில்லாத் தேனெடுத்து உண்டுவிட்டான் அது
- இனிக்கு தில்லையே வாலைப்பெண்ணே
49[தொகு]
மேலூரு கோட்டைக்கே ஆதரவாய் நன்றாய்
- விளங்கு கன்னனூர்ப் பாதையிலே
காலூரு வம்பலம் விட்டதனாலது
- கடு நடையடி வாலைப்பெண்ணே
50[தொகு]
தொண்டையுள் முக்கோணக் கோட்டையி லேயிதில்
- தொத்திக் கொடிமரம் நாட்டையிலே
சண்டை செய்து வந்தே ஓடிப் போனாள் கோட்டை
- வெந்து தணாலாச்சு வாலைப்பெண்ணே
51[தொகு]
ஆசை வலைக்குள் அகப்பட்டதும் வீடு
- அப்போதே வெந்தே அழிந்திட்டதும்
பாச வலைவந்து மூடியதும் வாலை
- பாதத்தைப் போற்றடி வாலைப்பெண்ணே
52[தொகு]
அன்னம் இருக்குது மண்டபத்தில் விளை
- யாடித் திரிந்ததே ஆண்புலியும்
இன்னம் இருக்குமே யஞ்சு கிளியவை
- எட்டிப் பிடிக்குமே மூன்று கிளி
53[தொகு]
தோப்பிலே மாங்குயில் கூப்பிடுதே புது
- மாப்பிள்ளை தான் வந்து சாப்பிடவும்
ஏய்க்கும் இப்படி யஞ்சாறு ஆந்தை
- இருந்து விழிப்பது பாருங்கடி
54[தொகு]
மீனிமிருக்குது தூரணியில் இதை
- மேய்ந்து திரியுங் கலசாவல்
தேனுமிருக்குது போரையிலே யுண்ணத்
- தெவிட்டு த்தில்லையே வாலைப்பெண்ணே
55[தொகு]
காகமிருக்குத் கொம்பிலே தான் கத
- சாவல் இருக்குது தெம்பிலேதான்
பார்க்க வெகுதூரம் இல்லை யிதுஞானம்
- பார்த்ததால் தெரியுமே வாலைப்பெண்ணே
56[தொகு]
கும்பிக் குளத்திலே யம்பலமாம் அந்தக்
- குளக் கருவூரில் சேறு மெத்த
தெம்பிலிடைக் காட்டுப் பாதைகளாம் வந்து
- சேர்ந்து ஆராய்ந்து பார் வாலைப்பெண்ணே
57[தொகு]
பண்டுமே ஆழக் கிணற்றுக்குள்ளே ரண்டு
- கெண்டை யிருந்து பகட்டுதடி
கண்டிருந்தும் அந்தக் காக்கையுமேயஞ்சி
- கழுகு கொன்றது பாருங்கடி
58[தொகு]
ஆற்றிலே \ஞ்சு முதலையடி யரும்
- புற்றிலே ரண்டு கரடியடி
கூற்றனு மூன்று குருடான டி பாசங்
- கொண்டு பிடிக்கிறான் வாலைப்பெண்ணே
59[தொகு]
முட்டை யிடுகுது ஒருபறவை முட்டை
- மோசம் பண்ணுது ஒருபறவை
வட்டமிட்டாரூர் கண்ணியில் ரெண்டு
- மானுந் தவிக்குது வாலைப்பெண்ணே
60[தொகு]
அட்டமாவின் வட்டம் பொட்டலி லேரண்டு
- அம்புலி நிற்குது தேர்மேலே
திட்டமாய் வந்து அடிக்குதில்லை தேகம்
- செந்தணல் ஆனதே வாலைப்பெண்ணே
61[தொகு]
முக்கோண வட்டக் கிணற்றுக்குள்ளே மூல
- மண்டல வாசிப் பழக்கத்திலே
அக்கோண வட்டச் சக்கரத் தில்வாலை
- அமர்ந்து இருக்கிறாள் வாலைப்பெண்ணே
62[தொகு]
இரண்டு காலாலொரு கோபுரமாம் நெடு
- நாளா யிருந்தே அமிழ்ந்து போகும்
கண்டபோது கோபுரமிருக்கும் வாலை
- காணவும் எட்டாள் நிலைக்க வொட்டாள்
63[தொகு]
அஞ்சு பூஊதத்தை யுண்டு பண்ணிக் கூட்டி
- ஆரா தாரத்தை யுண்டு பண்ணிக்
கொஞ்சு பெண்ணாசை யுண்டு பண்ணி வாலை
- கூட்டுகிறாள் காலனை மாட்டுகிறாள்
64[தொகு]
காலனைக் காலால் உதைத்தவளாம் வாலை
- ஆலகால விடம் உண்டவளாம்
மாளாச் செகத்தைப் படைத்தவளாம் இந்த
- மானுடன் கோட்டை இடித்தவளாம்
65[தொகு]
மாதாவாய் வந்தே அமுதம் தந்தாள் மனை
- யாட்டியாய் வந்து சுகம் கொடுத்தாள்
ஆதரவாகிய தங்கையானாள் நமக்கு
- ஆசைக் கொழுந்தியு மாமியானாள்
66[தொகு]
சிரித்து மெல்லப் புரம் எரித்தாள் வாலை
- செங்காட்டுச் செட்டியைத் தானுரைத்தாள்
ஒருத்தியாகவே சூரர் தமை வென்றாள்
- ஒற்றையாய்க் கஞ்சனைக் கொன்று விட்டாள்
67[தொகு]
இப்படியல்லோ இவள் தொழிலாம் இந்த
- ஈனா மலடி கொடுஞ் சூலி
மைப்படுங் கண்ணியர் கேளுங்கடி அந்த
- வயசு வாலை திரிசூலி
68[தொகு]
கத்தி பெரியதோ யுறை பெரிதோ இவள்
- கண்ணு பெரிதோ முகம் பெரிதோ
சத்தி பெரிதோ சிவம் பெரிதோ நீதான்
- சற்றே சொல்லடி வாலைப்பெண்ணே
69[தொகு]
அன்னப் பெரிதல்லால் தண்ணீர் பெரிதல்ல
- அப்படி வாலை பெரிதானால்
பொன்னு பெரிதல்லால் வெள்ளி பெரிதல்ல
- பொய்யாது சொல்கிறேன் கேளுங்கடி
70[தொகு]
மாமிசமானால் எலும்புமுண்டு சதை
- வாங்கி ஓடு கழன்றுவிடும்
ஆமிசம் இப்படிச் சத்தியென்றே விளை
- யாடிக் கும்மி அடியுங்கடி
71[தொகு]
பண்டு முளைப்பது அரிசியே யானாலும்
- விண்டுமி போனால் விளையாதென்று
கண்டு கொண்டு முன்னே அவ்வை சொன்னாளது
- உண்டோ இல்லையோ வாலைப்பெண்ணே
72[தொகு]
மண்ணு மில்லாமலே விண்ணுமில்லை கொஞ்சம்
- வாசமில்லாமலே பூவுமில்லை
பெண்ணுல்லாமலே யானும் இல்லையிது
- பேணிப் பாரடி வாலைப் பெண்ணே
73[தொகு]
நந்த வனத்திலே சோதியுண்டு நிலம்
- ந்ததிய பேருக்கு நெல்லுமுண்டு
விந்தையாய் வாலையைப் பூசிக்க முன்னாளில்
- விட்ட குறைவேணும் வாலைப் பெண்ணே
74[தொகு]
வாலையைப் பூசிக்கச் சித்தரானார் வாலைக்
- கொத்தாசை யாய்ச்சிவ கர்த்தரானார்
வேலையைப் பார்த்தல்லோ கூலிவைத்தார் இந்த
- விதந் தெரியுமோ வாலைப் பெண்ணே
75[தொகு]
வாலைக்கு மேலான தெய்வமில்லை மானங்
- காப்பது சேலைக்கு மேலுமில்லை
பாலுக்கு மேலான பாக்கியமில்லை வாலைக்
- கும்மிக்கு மேலான பாடலில்லை
76[தொகு]
நாட்டத்தைக் கண்டால் அறியலாகும் அந்த
- நாலாறு வாசல் கடக்கலாகும்
பூட்டைக் கதவைத் திறக்கலாகும் இது
- பொய்யல்ல மெய்யடி வாலைப் பெண்ணே
77[தொகு]
ஆணும் பெண்ணும் கூடியானதனாற் பிள்ளை
- ஆச்சுதென்றே நீரும் பேசுகின்றீர்
ஆணும் பெண்ணுங் கூடி யானதல்லோ பேதம்
- அற்றொரு வித்தாச்சு வாலைப் பெண்ணே
78[தொகு]
இன்றைக் கிருப்பதும் பொய்யல்ல வேவீடே
- என் வாழ்க்கை யென்பதும் பொய்யல்லவே
அன்றைக் கெழுத்தின் படிமுடியும் வாலை
- ஆத்தாளைப் போற்றடி வாலைப் பெண்ணே
79[தொகு]
வீணாசை கொண்டு திரியாதே இது
- மெய்யல்ல பொய்வாழ்வு பொய்க்கூடு
காணாத வாலையைக் கண்டுகொண்டாற் காட்சி
- காணலாம் ஆகாயம் ஆளலாமே
80[தொகு]
பெண்டாட்டி யாவதும் பொய்யல்லவோ பெற்ற
- பிள்ளைகள் ஆவதும் பொய்யல்லவோ
கொண்டாட்டமான தகப்பன் பொய்யே முலை
- கொடுத்த தாயும் நிசமா மோ
81[தொகு]
தாயும் பெண்டாட்டியந் தான்சரி யேதன்யம்
- தாமே யிருவருந்தாங் கொடுத்தார்
காயும் பழமுஞ் சரியாமோ உன்றன்
- கருத்தைப் பார்த்துக்கொள் வாலைப் பெண்ணே
82[தொகு]
பெண்டாட்டி மந்தைமட் டும் வருவாள் பெற்ற
- பிள்ளை மசானக் கரையின் மட்டும்
தெண்டாட்டுத் தர்மம் நடுவினிலே வந்து
- சேர்ந்து பரகதி தான் கொடுக்கும்
83[தொகு]
பாக்கியமும் மகள் போக்கியமும் ராச
- போக்கியமும் வந்த தானாக்கால்
சீக்கிரந் தருமம் செய்ய வேண்டுங் கொஞ்சத்
- திருப்ப ணிகள் முடிக்கவேண்டும்
84[தொகு]
திருப்பணி களை முடித்தோ ருஞ்செத்துஞ்
- சாகாத பேரில் ஒருவரென்றும்
அருட் பொலிந்திடும் வேதத்தி லேயவை
- அறிந்து சொன்னாளே வாலைப் பெண்ணே
85[தொகு]
மெத்தை தனிலே படுத்திருந் துநாமும்
- மெல்லிய ரோடு சிரிக்கும்போது
யுத்தகா லன் வந்து தான் பிடித் தால்நாமும்
- செத்த சவமடி வாலைப் பெண்ணே
86[தொகு]
ஏழை பனாதிகள் இல்லையென் றாலவர்க்
- கிருந்தா வன்னங் கொடுக்க வேண்டும்
நாளையென் றுசொல்ல லாகாதே யென்று
- நான் மறை வேதம் முழங்குதடி
87[தொகு]
பஞ்சை பனாதியடியாதே யந்தப்
- பாவந் தொலைய முடியாதே
தஞ்சமென் றோரைக் கெடுக்காதே யார்க்கும்
- வஞ்சனை செய்ய நினையாதே
88[தொகு]
கண்டதுங் கேட்டதுஞ் சொல்லாதே கண்ணில்
- காணாத வுத்தரம் விள்ளாதே
பெண்டாட்டிக் குற்றது சொல்லாதே பெற்ற
- பிள்ளைக் கிளப்பங் கொடுக்காதே
89[தொகு]
சிவன்ற னடியாரை வேதியரைச் சில
- சீர்புல ஞானப் பெரியோரை
மவுன மாகவும் வையாதேயவர்
- மனத்தை நோகவும் செய்யாதே
90[தொகு]
வழக்க ழிவுகள் சொல்லாதே கற்பு
- மங்கையர் மேல்மனம் வையாதே
பழக்க வாசியைப் பார்த்துக் கொண்டு வாலை
- பாதத்தைப் போற்றடி வாலைப் பெண்ணே
91[தொகு]
கூடிய பொய்களைச் சொல்லாதே பொல்லாக்
- கொலைக் களவுகள் செய்யாதே
ஆடிய பாம்பை யடியாதே இது
- அறிவு தானடி வாலைப் பெண்ணே
92[தொகு]
காரியனாகினும் வீரியம் பேசவும்
- காணா தென் றவ்வை சொன்னாளே
பாரினில் வம்புகள் செய்யா தேபுளிப்
- பழம்போ லுதிர்ந்து விழுந்தானே
93[தொகு]
காசார் கள்பகை செய்யாதே நடுக்
- காட்டுப் புலிமுன்னே நில்லாதே
தேசாந்திரங்களுஞ் செல்லாதே மாய்கைத்
- தேவடி யாள்தனம் பண்ணாதே
94[தொகு]
தன் வீடிருக்க அசல்வீடு போகாதே
- தாயார் தகப்பனை வையாதே
உன் வீட்டுக் குள்ளேயே யூகமிருக்கையில்
- ஓடித் திரிகிறாய் வாலைப் பெண்ணே
95[தொகு]
சாதி பேதங்கள் சொல்லுகிறீர் தெய்வம்
- தானென் றொருவுடல் பேதமுண்டோ
ஓதிய பாலதி லொன்றாகி யதிலே
- உற்பத்தி நெய்தயிர் மோராச்சு
96[தொகு]
பாலோடு மூண்டிடு பூனையு முண்டது
- மேலாக காணவுங் காண்பதில்லை
மேலந்த வாசையைத் தள்ளிவிட் டுள்ளத்தில்
- வேண்டிப் பூசையைச் செய்திடுங்கள்
97[தொகு]
கோழிக் கறு காலுண் டென்றுசொன் னேன் கிழக்
- கூனிக்கு மூன்றுகால் என்று சொன்னேன்
கூனிக்கிரண்டு எழுத்தென்று சொன்னேன் முழுப்
- பானைக்கு வாயில்லை யென்று சொன்னேன்
98[தொகு]
ஆட்டுக் கிரண்டுகா லென்று சொன்னேனம்
- மானைக்குப் பானைக்கு நிற்குமேல் சூல்
மாட்டுக்குக் காலில்லை யென்று சொன்னேன் கதை
- வகையைச் சொல்லடி வாலைப்பெண்ணே
99[தொகு]
கோயிலு மாடும் பறித்தவ னுங்கன்றிக்
- கூற்று மேகற் றிருந்தவனும்
வாயில்லாக் குதிரை கண்டவனு மாட்டு
- வகை தெரியுமோ வாலைப் பெண்ணே
100[தொகு]
இத்தனை சாத்திரந் தாம்படித் தோர்செத்தார்
- என்றா லுகத்தோர் தாம்சிரிப்பார்
செத்துப் போய்க் கூடக் கலக்கவேண் டுமவன்
- தேவர்களுடனே சேர வேண்டும்
101[தொகு]
உற்றது சொன்னக்கா லற்றது பொருந்தும்
- உண்டோ உலகத்தி லவ்வை சொன்னாள்
அற்றது பொருந்தும் உற்றது சொன்னவன்
- அவனே குருவடி வாலைப் பெண்ணே
102[தொகு]
பூரண நிற்கும் நிலையறி யான் வெகு
- பொய் சொல்வான் கோடி மந்திரஞ் சொல்வான்
காரண குரு அவனுமல்ல இவன்
- காரிய குருபொருள் பறிப்பான்
103[தொகு]
எல்லா மறிந்தவ ரென்று சொல்லி யிந்தப்
- பூமியிலே முழு ஞானியென்றே
உல்லாச மாக வயிறு பிழைக்கவே
- ஓடித் திரிகிறார் வாலைப் பெண்ணே
104[தொகு]
ஆதிவா லைபெரி தானாலும்மவள்
- அக்காள் பெரிதோ சிவன் பெரிதோ
நாதிவா லைபெரி தானா லும் அவள்
- நாயக னல்ல சிவம்பெரிது
105[தொகு]
ஆயுசு கொடுப்பாள் நீரிழிவு முதல்
- அண்டாது மற்ற வியாதியெல்லாம்
பேயும் பறந்திடும் பில்லி வினாடியில்
- பத்தினி வாலைப்பெண் பேரைச் சொன்னால்
106[தொகு]
நித்திரை தன்னிலும் வீற்றிருப் பாளெந்த
- நேரத்தி லும்வாலை முன்னிருப்பாள்
சத்துரு வந்தாலும் தள்ளிவைப் பாள்வாலை
- உற்றகா லனையுந் தானுதைப்பாள்
107[தொகு]
பல்லாயிர ங்கொடி யண்டமு தல்பதி
- னான்கு புவனமும் மூர்த்திமுதல்
எல்லாந் தானாய்ப் படைத்தவ ளாம்வாலை
- எள்ளுக்குள் எண்ணெய்போல நின்றவளாம்
108[தொகு]
தேசம் புகழ்ந்திடும் வாலைக் கும்மித் தமிழ்
- செய்ய எனக்குப தேசஞ் செய்தாள்
நேசவான் வீரப் பெருமாள் குருசாமி
- நீள் பதம் போற்றிக் கொண்டாடுங்கடி
109[தொகு]
ஆறு படைப்புகள் வீடு கடைசூத்ர
- அஞ்செழுத்துக்கும் வகையறிந்து
கூறுமுயர்வல வேந்த்ரன் துரைவள்ளல்
- கொற்றவன் வாழக் கொண்டாடுங்கடி
110[தொகு]
ஆடுங்கள் பெண்டுக ளெல்லோரும் அந்த
- அன்பான கொங்கணர் சொன்ன தமிழ்
பாடுங்கள் சித்தர்கள் எல்லோரும் வாலை
- பரத்தைப் போற்றிக் கொண்டாடுங்கடி
111[தொகு]
சித்தர்கள் வாழி சிவன்வா ழிமுனி
- தேவர்கள் வாழி ரிடி வாழி
பத்தர்கள் வாழி பதம்வாழி குரு
- பாரதி வாலைப் பெண் வாழியவே
முற்றும்